"வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்: அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே." (யோவான் 5:39).
செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017
வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017
அடைக்கல நகரங்கள்
தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் தன்னைப் பழிவாங்க வருகிறவனிடமிருந்து தப்பித்து, அடைக்கலம் புகுவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட லேவி கோத்திரத்து நகரங்கள். கர்த்தர் சொன்னபடி மோசேயும் பின்பு யோசுவாவும் இவற்றைத் தேர்ந்தெடுத்தார்கள். வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் ஆங்காங்கே மொத்தம் ஆறு நகரங்களை அடைக்கல நகரங்களாக ஒதுக்கினார்கள். தெரியாத்தனமாகக் கொலை செய்தவன் ஓர் அடைக்கல நகரத்துக்கு வந்தவுடன், நகரவாசலிலுள்ள பெரியோர்களிடம் நடந்த விஷயத்தைச் சொல்வான், அவர்களும் அவனை அங்கே தங்குவதற்கு அனுமதிப்பார்கள். வேண்டுமென்றே கொலை செய்தவன், இந்தச் சலுகையைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்கு ஓர் ஏற்பாடு இருந்தது. அதாவது, அடைக்கலம் தேடி வருகிறவன், கொலை நடந்த நகரத்துக்குக் கொண்டுபோய் விசாரிக்கப்படுவான். நிரபராதி என்பது நிரூபிக்கப்பட்டால் அவன் மறுபடியும் அடைக்கல நகரத்துக்குத் திரும்பி வந்து, தன் வாழ்நாள் முடியும்வரை அல்லது தலைமைக் குரு சாகும்வரை அங்கேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது, அந்த நகரத்தைவிட்டு வெளியே போக அவனுக்கு அனுமதி இல்லை. (எண் 35:6, 11-15, 22-29; யோசு 20:2-8).
வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017
பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 10
யூதா தேசம்
பாபிலோனியர்கள் யூதா தேசத்தை முற்றிலும் நாசமாக்குவார்கள் என்றும் நாடுகடத்தப்பட்ட யூதர்கள் திரும்பி வரும்வரை அது பாழாய் கிடக்கும் என்றும் பைபிள் முன்னறிவித்தது. (எரேமியா 25:8-11) இந்தத் தீர்க்கதரிசனம் உண்மையில் நிறைவேறியது என்பதை நம்புவதற்கு பலமான சான்று உள்ளது; அது, பரிசுத்த ஆவியானவரின் ஏவுதலால் எழுதப்பட்ட சரித்திரப் பதிவாகும். நாடுகடத்தப்பட்ட யூதர்களில் தங்கள் தாயகத்திற்கு திரும்பிய முதல் தொகுதி வந்து சேர்ந்து சுமார் 75 ஆண்டுகள் கழித்து அது எழுதப்பட்டது. பாபிலோனிய அரசன், யூதர்களில் “பட்டயத்திற்குத் தப்பின மீதியானவர்களை பாபிலோனுக்குச் சிறைபிடித்துப்போனான்; பெர்சியா ராஜ்யபாரம் ஸ்தாபிக்கப்படுமட்டும் அங்கே அவர்கள் அவனுக்கும் அவன் குமாரருக்கும் அடிமைகளாயிருந்தார்கள்” என்று அது குறிப்பிடுகிறது. அதோடு, யூதா தேசத்தைக் குறித்து, “தேசம்... பாழாய்க்கிடந்த நாளெல்லாம்... ஓய்ந்திருந்தது” என்றும் குறிப்பிடுகிறது. (2 நாளாகமம் 36:20, 21) இதை நிரூபிக்கும் தொல்பொருள் அத்தாட்சிகளை காண்போம்;
எபிரெய பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பாலஸ்தீன தொல்பொருள் பேராசிரியர் ஈஃபிரேம் ஸ்டர்ன் என்பவர் பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “பூர்வ இஸ்ரவேலின் பெரும்பாலான பகுதிகளை அசீரியர்களும் பாபிலோனியர்களும் நாசமாக்கினார்கள்; ஆனால், இத்தேசத்தை அசீரியர்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட நிலையும், பாபிலோனியர்கள் கைப்பற்றிய பிறகு ஏற்பட்ட நிலையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபட்டதாய் இருந்தது என்று தொல்பொருள் அத்தாட்சி கூறுகிறது.” மேலுமாக, அவர் இவ்வாறு விளக்குகிறார்: “பாலஸ்தீனாவை அசீரியர்கள் ஆக்கிரமித்ததற்கு தெளிவான அத்தாட்சிகள் இருக்கின்றன; ஆனால், பாபிலோனியர்கள் அத்தேசத்தை அழித்தபிறகு, அதை ஆக்கிரமித்ததற்கான அத்தாட்சி இல்லை... பெர்சியர்களுடைய காலப்பகுதி வரையிலுமாக அங்கே மக்கள் குடியிருந்ததற்கான எந்த அத்தாட்சியும் இல்லை... அங்கே எவரும் குடியிருந்ததற்கான சிறு தடயமும் இல்லை. அந்தக் காலப்பகுதியில், பாபிலோனியர்களால் அழிக்கப்பட்ட ஒரு பட்டணத்தில்கூட மக்கள் குடியேறவில்லை.”
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் லாரன்ஸ் ஈ. ஸ்டேஜர் இதை ஒப்புக்கொள்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: பாபிலோனிய அரசர்கள், “பெலிஸ்தியா முழுவதிலும், அதைத் தொடர்ந்து யூதா முழுவதிலும் தீக்கிரையாக்கும் கொள்கையை கையாண்டதால் யோர்தான் நதியின் மேற்குப் பகுதி பொட்டல் காடானது.” அவர் தொடர்ந்து இவ்வாறு சொல்கிறார்: “பாபிலோனியர்களைக் கைப்பற்றி அரசாண்ட பெர்சிய அரசன் மகா கோரேசின் காலத்தில்தான்... எருசலேமிலும் யூதாவிலும் மக்கள் மீண்டும் குடியிருந்ததற்கான தொல்பொருள் அத்தாட்சிகள் கிடைத்திருக்கின்றன. ஏனென்றால் அப்போதுதான் நாடுகடத்தப்பட்ட யூதர்கள் அநேகர் தங்கள் தாயகத்திற்கு திரும்பி வந்தார்கள்.”
யூதா பாழாய் கிடப்பதைக் குறித்த கர்த்தரின் வார்த்தை உண்மையில் நிறைவேறியது. கர்த்தர் முன்னறிவிப்பது நிச்சயம் நிறைவேறும். (ஏசாயா 55:10, 11) ஆகவே, கர்த்தர் மீதும் அவருடைய வார்த்தையாகிய வேதாகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாக்குறுதிகள்மீதும் நாம் முழு நம்பிக்கை வைக்கலாம். (2 தீமோத்தேயு 3:16).
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)












