வெள்ளி, 16 ஜூன், 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 7

சமாரிய மண் ஓடுகள்



கி.மு. 740-ல் சமாரியாவை அசீரியர்கள் வீழ்த்தும்வரை, இது இஸ்ரவேலின் பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகராய் இருந்தது. சமாரியா உருவான விதத்தை 1 இராஜாக்கள் 16:23, 24 பின்வருமாறு குறிப்பிடுகிறது: “யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் முப்பத்தோராம் வருஷத்தில் [கி.மு. 947], உம்ரி இஸ்ரவேல்மேல் ராஜாவாகி,... சேமேரின் கையிலிருந்து சமாரியா மலையை இரண்டு தாலந்து வெள்ளிக்கு வாங்கி, அந்த மலையின்மேல் ஒரு பட்டணத்தைக் கட்டி, அதற்கு... சமாரியா என்னும் பேரைத் தரித்தான்.” ரோமர்களின் ஆட்சிக் காலம்வரை அந்த நகரம் நிலைத்திருந்தது; அப்போது அதன் பெயர் சபாஸ்டி என்று மாற்றப்பட்டது. கடைசியில், கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அது அடியோடு அழிந்தது.

1910-ஆம் ஆண்டு, தொல்பொருள் ஆராய்ச்சி நடத்தும் ஒரு குழுவினர், பண்டைய சமாரியா இருந்த இடத்தைத் தோண்டியபோது நிறைய மண் ஓடுகளைக் கண்டுபிடித்தார்கள். இவை கி.மு. எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவையென அவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். சமாரியாவின் சுற்றுவட்டாரங்களிலிருந்து எண்ணெய், திராட்சை ரசம் ஆகியவை அங்கு கொண்டுவரப்பட்டதாக அந்த ஓடுகளில் காணப்பட்ட வாசகங்கள் தெரிவிக்கின்றன. பூர்வ எழுத்துப்பொறிப்புகள் - வேதாகம காலத்தைப் பறைசாற்றும் குரல்கள் என்ற ஆங்கில புத்தகம் இந்தக் கண்டுபிடிப்பைக் குறித்துப் பின்வருமாறு சொல்கிறது: “1910-ல் கண்டுபிடிக்கப்பட்ட 63 மண் ஓடுகள்... பூர்வ இஸ்ரவேலில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்துப்பொறிப்புகளில் மிக முக்கியமானவையாய்க் கருதப்படுவது சரியானதே. இந்த ஓடுகளில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் முக்கியமாய் இருப்பதால் அல்ல.... மாறாக, இஸ்ரவேலரின் பெயர்கள், வம்சங்களின் பெயர்கள், இடங்களின் பெயர்கள் ஆகியவை எக்கச்சக்கமாகக் காணப்பட்டதே இதன் முக்கியத்துவத்திற்குக் காரணம்.” வேதாகமத்திலுள்ள தகவல்களை இவை ஊர்ஜிதப்படுத்துவதை காண்போம்.

இஸ்ரவேலர் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைக் கைப்பற்றிய பிறகு, அதைத் தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டார்கள். மனாசே கோத்திரத்தாருக்குக் கொடுக்கப்பட்ட பிராந்தியத்தில் சமாரியா அமைந்திருந்தது. யோசுவா 17:1-6-ன்படி, மனாசேயின் பேரனான கிலெயாத்தின் வழிவந்த பத்து வம்சங்களுக்கு இந்தப் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டது. கிலெயாத்தின் மகன்களான அபியேசர், ஏலேக், அஸ்ரியேல், செகேம், செமீதா ஆகியோருக்கு அங்கே இடம் ஒதுக்கப்பட்டது. ஆறாவது நபரான எப்பேருக்கு, பேரன்கள் இல்லாததால் அவருடைய ஐந்து பேத்திகளான மக்லாள், நோவாள், ஒக்லாள், மில்காள், திர்சாள் ஆகியோருக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.-எண்ணாகமம் 27:1-7.

இவற்றில் ஏழு குடும்பங்களின் பெயர்களை சமாரிய மண் ஓடுகளில் காணமுடிகிறது. கிலெயாத்தின் மகன்கள் ஐந்து பேரின் பெயர்களும், எப்பேரின் பேத்திகளான ஒக்லாள், நோவாள் ஆகியோரின் பெயர்களும் இவற்றில் காணப்படுகின்றன. “சமாரிய மண் ஓடுகளில் உள்ள பெயர்களை வைத்து மனாசே கோத்திரத்தில் வந்த வம்சத்தாருக்கும், அவர்கள் குடியிருந்ததாய் வேதாகமத்தில் குறிப்பிடப்படுகிற இடங்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைத் தெரிந்துகொள்ள முடிகிறது. பரிசுத்த வேதாகமம் தவிர இதை விளக்குகிற மற்றொரு அத்தாட்சி இதுவாகும்” என்று NIV ஆர்க்கியலாஜிக்கல் ஸ்டடி பைபிள் (ஆங்கிலம்) என்ற புத்தகம் தெரிவிக்கிறது. இஸ்ரவேல் கோத்திரங்களின் ஆரம்ப கால சரித்திரத்தை விளக்கும் வேதாகம பதிவு நம்பகமானது என்பது இந்த மண் ஓடுகளிலிருந்து தெளிவாகிறது.

இஸ்ரவேலரின் மத சூழல்பற்றி பரிசுத்த வேதம் தரும் தகவல்களையும் சமாரிய மண் ஓடுகள் நிரூபிப்பதாகத் தெரிகிறது. இவை எழுதப்பட்ட சமயத்தில், கர்த்தரின் வழிபாட்டை கானானிய தெய்வமான பாகாலின் வழிபாட்டோடு சம்பந்தப்படுத்தியிருந்தார்கள். கி.மு. எட்டாம் நூற்றாண்டில், எழுதப்பட்ட ஓசியா தீர்க்கதரிசனமும் இஸ்ரவேலர் மனந்திரும்பும் காலத்தைப்பற்றி முன்னுரைத்தது. அப்போது, கர்த்தரை இஸ்ரவேலர் “ஈஷி,” அதாவது, என் கணவர் என்று அழைப்பார்கள் என்றும் இனிமேலும், “பாகாலி” அதாவது, என் உரிமையாளர் என அழைக்க மாட்டார்கள் என்றும் முன்னுரைத்தது. (ஓசியா 2:16, 17) சமாரிய மண் ஓடுகளில் காணப்பட்ட சிலருடைய பெயர்கள் “பாகால் என் தகப்பன்,” “பாகால் பாடுகிறான்,” “பாகால் பலசாலி,” “பாகால் நினைந்தருளுகிறான்” போன்ற அர்த்தங்களைத் தந்தன. ஏதோவொரு விதத்தில் கர்த்தரின் பெயர் இணைக்கப்பட்ட 11 பெயர்கள் காணப்பட்டால், 7 பெயர்கள் ‘பாகாலின்’ பெயரை உடையதாய் இருந்தன.

வெள்ளி, 9 ஜூன், 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 6

தத்னாய்



  1. 2014-ல், வேதாகமம் சம்பந்தமான தொல்பொருள் ஆராய்ச்சி (ஆங்கிலம்) என்ற பத்திரிகையில் இந்தக் கேள்வி கொடுக்கப்பட்டிருந்தது: “எபிரெய வேதாகமத்திலுள்ள எத்தனை பேர் உண்மையிலேயே வாழ்ந்தார்கள் என்று தொல்பொருள் ஆராய்ச்சிகள் நிரூபித்திருக்கிறது?” “குறைந்தது 50 பேர்” என்று அதே கட்டுரை பதில் சொன்னது. இந்தப் பட்டியலில் தத்னாய் என்பவரின் பெயர் இல்லை.
ஒரு காலத்தில், எருசலேம் நகரம் பரந்து விரிந்த பெர்சிய சாம்ராஜ்யத்தின்கீழ் இருந்தது. யூப்ரடிஸ் ஆற்றுக்கு மேற்கே இருந்த பகுதியை ‘ஆற்றுக்கு அப்பால்’ என்று பெர்சியர்கள் அழைத்தார்கள். அங்குதான் எருசலேம் நகரம் இருந்தது. பெர்சியர்கள் பாபிலோனை கைப்பற்றிய பிறகு, யூதர்களை விடுதலை செய்து எருசலேமுக்குத் திரும்பி போகவும் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டவும் அனுமதி கொடுத்தார்கள். (எஸ்றா 1:1-4) ஆனால், யூதர்களின் எதிரிகள் இந்தக் கட்டுமான வேலையைத் தடுக்க முயற்சி செய்தார்கள். யூதர்கள், பெர்சிய அரசாங்கத்துக்கு எதிராக கலகம் செய்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்கள். அதற்கு, ஆலயம் கட்டும் வேலையைக் காரணம் காட்டினார்கள். (எஸ்றா 4:4-16) முதலாம் தரியு ஆட்சி செய்த காலத்தில் (கி.மு. 522-கி.மு. 486 வரை) ஆளுநராக இருந்த தத்னாய் இந்தப் பிரச்சினையை விசாரித்தார். இவரைத்தான் வேதாகமம், “ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநர்” என்று சொல்கிறது. (எஸ்றா 5:3-7).

ஒரு குடும்பத்தைப் பற்றிய பதிவேடு நிறைய கியூனிஃபார்ம் பலகைகளில் இருக்கிறது. அதில் பலவற்றில் தத்னாய் என்பவரின் பெயரும் இருக்கிறது. இந்தக் குடும்பத்திலுள்ள ஒருவருக்கும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கும் தத்னாயுக்கும் சம்பந்தம் இருப்பதாக ஒரு கியூனிஃபார்ம் பலகை காட்டுகிறது. அந்தப் பலகை ஒரு உறுதிமொழிக் கடன்பத்திரம். இந்தப் பத்திரம் முதலாம் தரியு ராஜா ஆட்சி செய்த 20-வது வருஷம், அதாவது கி.மு. 502-ல், எழுதப்பட்டது. இந்தக் கொடுக்கல் வாங்கலுக்குச் சாட்சியாக இருந்தது “ஆற்றுக்கு அப்பாலுள்ள ஆளுநரான தத்னு” என்பவரின் வேலைக்காரன் என்று அந்தப் பலகையில் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த தத்னு என்பவர்தான் வேதாகமத்திலுள்ள எஸ்றா புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் தத்னாய்.

கி.மு. 535-ல் மகா ராஜாவான கோரேசு அவருடைய சாம்ராஜ்யத்தை மாகாணங்களாக பிரித்தார். அதில் ஒரு மாகாணம், ‘பாபிலோன் மற்றும் ஆற்றுக்கு அப்பால்’ என்று அழைக்கப்பட்டது. இந்த மாகாணம் பிற்பாடு இரண்டாக பிரிந்தது, அதன் ஒரு பகுதி ‘ஆற்றுக்கு அப்பால்’ என்று மட்டும் அழைக்கப்பட்டது. சிலி-சிரியா, பெனிக்கே, சமாரியா, யூதா போன்ற நகரங்கள் இந்தப் பகுதியின் பாகமாக இருந்தது. இதன் தலைநகரம் தமஸ்குவாக இருந்திருக்கலாம். கி.மு. 520-லிருந்து கி.மு. 502 வரைக்கும் இந்தப் பகுதிக்கு தத்னாய் ஆளுநராக இருந்தார்.

யூதர்கள்மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை விசாரிக்க தத்னாய் எருசலேமுக்கு வந்தார். கோரேசு ராஜாவின் அனுமதியோடுதான் கர்த்தரின் ஆலயத்தைக் கட்டுவதாக யூதர்கள் சொல்லிக்கொள்கிறார்கள் என்று தத்னாய் தரியு ராஜாவிடம் சொன்னார். யூதர்கள் சொல்வது உண்மையென்று அரசுப் பதிவேடுகள் காட்டியது. (எஸ்றா 5:6, 7, 11-13; 6:1-3) அதனால், யூதர்களின் விஷயத்தில் தலையிட வேண்டாம் என்று தத்னாயுக்கு கட்டளை கொடுக்கப்பட்டது. அதற்கு அவர் கீழ்ப்படிந்தார். (எஸ்றா 6:6, 7, 13).

‘ஆற்றுக்கு அப்பாலுள்ள பிரதேசத்தின் ஆளுநரான தத்னாய்’ சரித்திரத்தில் ரொம்ப பிரபலமான ஒருவர் கிடையாது. இருந்தாலும் அவரைப் பற்றியும் அவருடைய பதவியைப் பற்றியும் வேதாகமம் மிகச் சரியாக சொல்கிறது. சரித்திரப்பூர்வமாக பைபிள் துல்லியமானது என்பதை நிரூபிக்க இந்தப் பதிவு இன்னொரு அத்தாட்சி.

வெள்ளி, 2 ஜூன், 2017

விடுதலைக்காக கர்த்தர் நடத்திய பயணம்

யாத்திராகமம்


 

☀ யாத்திராகமம் சீனாய் வனாந்தரத்தில் கி.மு. 1512-ல் எழுதப்பட்டது. அப்போது, இஸ்ரவேலர்கள் எகிப்திலிருந்து விடுதலையாகி ஒரு வருடம் கடந்துவிட்டது. 145 வருட காலப்பகுதியில், அதாவது கி.மு. 1657-ல் யோசேப்பு இறந்தது முதல் 1512-ல் கர்த்தரின் வணக்கத்திற்காக ஆசரிப்புக்கூடாரம் கட்டப்பட்ட சமயம் வரையில் நடைபெற்ற சம்பவங்கள் இப்புத்தகத்தில் உள்ளன.— யோவா.7:19, யாத்.1:6 ; 40:17.

☀ மோசே யாத்திராகமத்தின் எழுத்தாளர். இப்புத்தகம் ஐந்தாகமத்தின்(Pentateuch) இரண்டாம் தொகுதி என்பதிலிருந்து இது புலனாகிறது.

கர்த்தரின் வழி நடத்துதலின் கீழ் மோசே பதிவு செய்த மூன்று சந்தர்ப்பங்களை இந்தப்புத்தகமே குறிப்பிடுகிறது.(17:14 ; 24:4 ; 34:27)

☀ யாக்கோபின் வழித்தோன்றல்கள் எகிப்திலே பல்கிப் பெருகி யாக்கோபின் புதுப் பெயரான 'இஸ்ராயேல்' என்ற பெயரால் அழைக்கப்பட்டார்கள், கர்த்தர் அவர்களை எவ்வாறு இனமாக மாற்றினார் என்பதை யாத்திராகமம் வெளிப்படுத்துகின்றது.

☀ யாத்திராகமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்கள் ஏறக்குறைய 3,500ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவை. ஆகவே, இந்தப்பதிவுகள் துல்லியமாக இருப்பதைக்காட்டும் தொல்பொருள் அத்தாட்சிகளும் மற்ற அத்தாட்சிகளும் ஏராளமாக இருப்பது ஆச்சரியத்திற்குரிய விஷயமே.

எகிப்திய பெயர்கள் யாத்திராகமத்தில் திருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. அதில் குறிப்பிடப்பட்டுள்ளபட்டப் பெயர்கள் எகிப்திய கல் வெட்டுகளோடு ஒத்திருக்கின்றன. எகிப்தியர்கள் அந்நியர்களை தங்கள் தேசத்தில் தங்க அனுமதித்தாலும் அவர்களோடு ஒட்டி உறவாடவில்லை என்பதை தொல்பொருள் ஆராய்ச்சிகாட்டுகிறது. நைல் நதி நீராடுவதற்கு பயன்படுத்தப்பட்டதாகவும் ஆராய்ச்சி காட்டுகிறது. பார்வோனின் குமாரத்தி அங்கே குளித்ததை இது நினைப்பூட்டுகிறது. வைக்கோலை பயன்படுத்தியும் பயன்படுத்தாமலும் செய்யப்பட்ட செங்கற்கள் அங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், எகிப்து செழிப்பாக இருந்த காலத்தில் மந்திரவாதிகள் அங்கு பிரபலமாக இருந்ததும் தெரியவந்துள்ளது. - யாத்.8:22 ; 2:5 ; 5:6,7, 18 ; 7:11.

☀ போரில் பார்வோன்களே முன் நின்று இரதவீரர்களை வழி நடத்தியதை நினைவுச்சின்னங்கள் காட்டுகின்றன. மோசேயின் நாளிலிருந்த பார்வோன் இந்த வழக்கத்தை பின் பற்றியதை யாத்திராகமம் குறிப்பிடுகிறது.

☀ யாத்திராகமம், எபிரெயுவில் உவீல்லே ஷெமாஹத்(Weelleh shemohth) எனஅழைக்கப்படுகிறது. இதன்அர்த்தம் “இப்போது அந்தப்பெயர்களானவை” என்பதாகும். அல்லது வெறுமனே ஷெமாஹத் என்றும் அழைக்கப்படும், இது “பெயர்கள்” என பொருள்படும். இந்த எபிரெய வார்த்தைகள் அந்தப்புத்தகத்தில் முதலில் வரும் வார்த்தைகளாகும். இதன் தற்கால பெயர் கிரேக்க செப்டுவஜின்ட் மொழி பெயர்ப்பிலிருந்து வருகிறது. அங்கே இது ஈக்சோடாஸ்(Exodos) என அழைக்கப்படுகிறது. அது எக்சொடஸ் (Exodus) என லத்தீன் வடிவமாக்கப்பட்டுள்ளது, “வெளிச்செல்லுதல்” அல்லது “புறப்படுதல்” என்பது இதன்பொருள்.

ஆதியாகம விவரப்பதிவின் தொடர்ச்சியே யாத்திராகமம் என்பதை பின்வரும் விஷயங்கள் காட்டுகின்றன: “Now - இப்போது”(சொல்லர்த்தமாக சொன்னால்,“மேலும்”) என்ற வார்த்தையோடு ஆரம்பமாகிறது. அதோடு, ஆதியாகமம் 46:8-27ல் உள்ள யாக்கோபின் குமாரர்களுடைய பெயர் பட்டியலை மீண்டும் குறிப்பிடுகிறது.

☀ யேகோவா என்ற கடவுளுடைய மகத்தான பெயரை மகிமையோடும் பரிசுத்தத்தன்மையோடும் மிகச்சிறப்பாக யாத்திராகமம் வெளிப்படுத்துகிறது. தம்முடைய பெயரின் ஆழமான அர்த்தத்தை தெளிவுபடுத்திய போது, மோசேயிடம் கர்த்தர் சொன்னார்: “நான் என்னவாக நிரூபிப்பேனோ அவ்வாறே நிரூபிப்பேன்.”

மேலும், இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொல்லும்படி அவர் மோசேக்கு கட்டளையிட்டார்: “நிரூபிப்பேன் [எபிரெயுவில்: אהיה, யெஹ்யா (Eh·yeh); ஹாயா (ha·yah)என்ற எபிரெய வினைச்சொல்லிலிருந்து வந்தது] என்பவர் என்னை உங்களிடத்திற்கு அனுப்பினார்.”

☀ யேகோவா(אטיח ,YHWH ,ய்ஹ்வ்ஹ்)என்ற பெயர் “ஆகும்” என பொருள் படும் எபிரெய வினைச்சொல் ஹாவா(ha·wah) என்பதிலிருந்து வருகிறது. “அவர் ஆகும் படி செய்கிறார்”(“He Causes to Become”) என அர்த்தப்படுத்துகிறது.

☀ யாத்திராகமத்தில் 40'அதிகாரங்கள், 1212'வசனங்கள் உள்ளன.

☀ புதிய ஏற்பாடு, யாத்திராகமத்தை100-க்கும் மேற்பட்ட தடவை மேற்கோள் காட்டுகின்றது.

ஒவ்வொன்றினதும் ஆரம்பம்

ஆதியாகமம்



☀ பஞ்சாகமங்களிலும், முழு வேதாகமத்திலும் முதல் புத்தகமாக வருவது இந்த ஆதியாகமமே.

☀ ஆதியாகமத்தில் 50 அதிகாரங்கள், 1533 வசனங்கள் உள்ளன.

☀ பிரப்பஞ்சத்தின் ஆரம்பம், மனிதனின் ஆரம்பம், இஸ்ரவேலரின் ஆரம்பம் என்று அநேக சரித்திர ஆரம்பங்களை இப்புத்தகத்திலே காணலாம்.

☀ சாத்தான் அதிகமாய் வெறுக்கக்கூடிய புத்தகங்களில் மிகவும் முக்கியமானதாக வேதபண்டிதர்கள் கருதுவது ஆதியாகமமும், வெளிப்படுத்தின விசேஷமும் தான். காரணம், இவை இரண்டிலும் சாத்தானுடைய முடிவு எப்படி இருக்கும் என்று தீர்க்கதரிசனமாக முன்றுரைக்கப்பட்டுள்ளது.

☀ ஆதியாகமம் ஆதாம் முதல் யோசேப்பு வரை 2000 ஆண்டுகால சரித்திரத்தை உள்ளடக்கியது.

☀ ஆதியாகமத்தின் ஆசிரியர் மோசே என்று வேதப்பண்டிதர்கள் கருதுகின்றனர்.

☀ நாம் மிக முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டியவர்கள் ஆதாம், ஏவாள், ஏனோக்கு, நோவா, ஆபிரகாம், சாராள், ஈசாக்கு ரெபேக்காள், இஸ்மவேல், யாக்கோபு, யோசேப்பு , மற்றும் பார்வோன்.

☀ நாம் அவசியமாக அறிந்துகொள்ளவேண்டிய இடங்கள் ஏதேன் தோட்டம், அராத்மலை, பாபேல், வளர், ஆரான், சீகேம், சோதோம், கொமொரா, எப்ரோன், பெயர்செபா, பெத்தேல் மற்றும் எகிப்து.

☀ ஆதியாகமம் எழுதப்பட்ட மொழி எபிரேய மொழியாகும்.

☀ ஆதியாகமத்தில் 71 வாக்குத்தத்தங்களும் 106 கட்டளைகளும் உள்ளன.

☀ ஆதியாகமத்தில் நிகழ்வுகளை நிரூபிக்கக்ககூடிய அநேக தொல்பொருள் ஆராய்ச்சியின் ஆதாரங்கள் இன்றும் வெளிதாட்டின் கிறிஸ்தவ அருங்காட்சியகங்களில் காணலாம்.

☀ சர் ஐசக் நியூட்டன் உள்பட பல விஞ்ஞானிகள் தேவனுடைய படைப்பை பார்த்து அதிசயத்து ஆதியாகமத்தை போற்றியுள்ளனர்.

☀ ஆதியாகமத்திலே சிறுவர்களை அதிகமாக கவர்ந்த பகுதி நோவா தாத்தா பேழையும், 6-நாள் சிருஷ்டிப்புமாகும்.

☀ ஆதியாகமத்தில் மொத்தம் சம்பவங்கள் தீர்க்கதரிசனமாக முன்னுரைக்கப்பட்டுள்ளன.

☀ ஆதியாகமத்தில் மிக சிறிய அதிகாரம் 16, பெரிய அதிகாரம் 24.

☀ ஆதியாகமத்தில் உள்ள 1533 வசனங்களில் 1385 வசனங்கள் முழுக்க முழுக்க சரித்திரத்தை சொல்லுகிறது.

☀ தேவனிடமிருந்து மனிதனுக்கு அருளப்பட்ட செய்திகள் மொத்தம் 35 ஆகும்.

☀ ஆதியாகமம் எழுதப்பட்ட காலம் கி.மு. 1688-ஆக இருக்கும் என்று கருதுகின்றனர்.

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ 5

எருசலேமைக் குறித்து இயேசுவின் தீர்க்கதரிசனம்;


1970-⁠ல் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஒரு குழு, எருசலேமில் தோண்டியபோது தீயில் கருகிய, இடிந்துபோன ஒரு கட்டடத்தைக் கண்டுபிடித்தது. “ஆராய்ச்சி செய்து பழக்கப்பட்ட கண்களுக்கு அங்கு என்ன சம்பவித்திருக்கும் என்பது தெள்ளத் தெளிவாய்த் தெரிந்தது.... அந்தக் கட்டடம் தீக்கிரையாகியிருந்தது, சுவர்களும் உட்கூரையும் நொறுங்கி விழுந்திருந்தன” என்று அந்த ஆய்வுக்குழுவின் தலைவரான நமான் ஆவீகாட் எழுதினார். படிக்கட்டைப் பிடிப்பதற்கு விரல்களை நீட்டிய நிலையில் இருந்த கை ஒன்றின் எலும்புகள் ஓர் அறையில் கிடந்தன.

தரை முழுவதும் நாணயங்கள் சிதறிக்கிடந்தன; அவற்றில், கி.பி. 69-ஐச் சேர்ந்த நாணயங்களும் அதற்கு முந்தைய ஆண்டுகளைச் சேர்ந்தவையும் இருந்தன; கி.பி. 69-⁠க்குப்பின் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் எதுவும் காணப்படவில்லை. இதுவே ரோமர்களுக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்த நான்காவது வருடமாகும். கட்டடம் நொறுங்கி விழுவதற்கு முன்பாக பொருள்கள் நாலாபுறமும் இறைக்கப்பட்டிருந்தன. “இதைப் பார்த்தபோது, பட்டணத்தைக் கைப்பற்றிய பிறகு ரோம படைவீரர்கள் வீடுகளைச் சூறையாடியதைப்பற்றி ஜொஸிஃபஸ் விவரித்தது எங்கள் நினைவுக்கு வந்தது” என்று ஆவீகாட் சொன்னார். கி.பி. 70-⁠ல் ரோமர்கள் எருசலேம் நகரத்தை அழித்து, அதிலிருந்த பொருள்களைக் கொள்ளையடித்தார்களென சரித்திராசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

அந்த எலும்புகள் 20 முதல் 30 வயதுக்குட்பட்ட ஒரு பெண்ணினுடையது என ஆய்வின் முடிவில் தெரியவந்தது. “கருகிக்கிடந்த அந்த வீட்டின் சமையலறையில் இருந்த அந்த இளம் பெண், ரோமர்கள் தாக்கியபோது மூண்ட தீயில் சிக்கிக்கொண்டாள்; தரையில் தடுமாறி விழுந்தவள் கதவருகே இருந்த படியைப் பிடிப்பதற்கு முயன்று கொண்டிருந்தபோது இறந்துவிட்டாள். நெருப்பு மளமளவென பரவியதால்... தப்பிக்க முடியாமல் இடிபாடுகளில் புதையுண்டாள்” என்று பிப்ளிக்கல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகை சொல்கிறது.

இந்தக் காட்சி, எருசலேமைக் குறித்து இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தை நமக்கு நினைப்பூட்டுகிறது; இப்படிச் சம்பவிப்பதற்கு சுமார் 40 வருடங்களுக்கு முன்பு அவர் இவ்வாறு சொன்னார்: “உன் சத்துருக்கள்... உன்னையும் உன்னிலுள்ள உன் பிள்ளைகளையும் தரையாக்கிப்போட்டு, உன்னிடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்குச் செய்[வார்கள்].” (லூக்கா 19:43,44).