செவ்வாய், 30 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தி



☞ திராக்மா:
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது 3.4 கிராம் எடையுள்ள கிரேக்க வெள்ளிக் காசைக் குறிக்கிறது. எபிரெய வேதாகமத்தில், பெர்சியர்களின் காலப்பகுதியைச் சேர்ந்த தங்க திராக்மாவைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது; இந்த திராக்மா, தாரிக் காசு என்று கருதப்படுகிறது. (நெகே 7:70, மத் 17:24).

☞ திராட்சமது காணிக்கை:
பலிபீடத்தின்மீது காணிக்கையாக ஊற்றப்பட்ட திராட்சமது. பெரும்பாலான மற்ற பலிகளோடு சேர்த்து இது கொடுக்கப்பட்டது. சக கிறிஸ்தவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராய் இருப்பதைத் தெரியப்படுத்த பவுல் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். (எண் 15:5, 7; பிலி 2:17).

☞ திராட்சரச ஆலை:
பொதுவாக, சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட இரண்டு தொட்டிகளைக் குறிக்கிறது. ஒரு தொட்டி இன்னொன்றைவிட உயரத்தில் இருந்தது. இவை இரண்டும் ஒரு சிறிய கால்வாய் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. மேலே இருந்த தொட்டியில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டபோது, கீழே இருந்த தொட்டியில் திராட்சரசம் நிரம்பியது. கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஏசா 5:2; வெளி 19:15).

☞ திரி வெட்டும் கருவிகள்:
இந்தக் கருவிகள் வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்டன. இவை தங்கம் அல்லது செம்பால் செய்யப்பட்டிருந்தன. விளக்குத் திரிகளை வெட்டுவதற்கான இந்தக் கருவிகள் பார்ப்பதற்குக் கத்தரிக்கோல் போல இருந்திருக்கலாம். (2 இரா 25:14).

☞ திரிகைக் கல்:
ஒரு வட்ட வடிவ கல்மீது வைக்கப்பட்ட இன்னொரு வட்ட வடிவ கல்; தானியங்களை அரைக்க இது பயன்படுத்தப்பட்டது. மேற்கல்லை சுழற்றுவதற்காக, அடிக்கல்லின் நடுவில் ஒரு முளை பொருத்தப்பட்டிருந்தது. பைபிள் காலங்களில், கையினால் சுற்றப்பட்ட திரிகைக் கல் பெரும்பாலான வீடுகளில் இருந்தது, பெண்கள் இதைப் பயன்படுத்தினார்கள். அன்றாட உணவான ரொட்டியைத் தயாரிக்க இது கட்டாயம் தேவைப்பட்டதால், திரிகையின் அடிக்கல்லையோ அதன் மேற்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது என்ற கட்டளை திருச்சட்டத்தில் இருந்தது. பெரிய திரிகைக் கல் விலங்குகளை வைத்து இயக்கப்பட்டது. (உபா 24:6, மாற் 9:42).

☞ திருச்சட்டம்:
கி.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்தில் இருந்தபோது மோசே மூலமாக கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த முழு சட்டத் தொகுப்பை அல்லது பைபிளின் முதல் 5 புத்தகங்களைக் குறிக்கிறது. (யோசு 23:6; லூ 24:44; மத் 7:12; கலா 3:24) சில சமயங்களில், ‘சட்டம்’ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிற வசனங்களில், அது திருச்சட்டத்திலுள்ள ஒரு தனி சட்டத்தை அல்லது ஒரு சட்டத்திலுள்ள நியமத்தை அர்த்தப்படுத்தலாம். (எண் 15:16; உபா 4:8).

☞ திரைச்சீலை:
வழிபாட்டுக் கூடாரத்திலும் சரி, ஆலயத்திலும் சரி, பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் நடுவில் போடப்பட்டிருந்த துணி; இது அழகாக நெய்யப்பட்டிருந்தது; இதில் கேருபீன் வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. (யாத் 26:31; 2 நாளா 3:14; மத் 27:51; எபி 9:3).

☞ தினாரியு:
சுமார் 3.85 கிராம் எடையுள்ள ரோம வெள்ளிக் காசு. இதன் ஒரு பக்கத்தில் ரோம அரசனுடைய உருவம் இருந்தது. இது ஒரு கூலியாளின் தினக் கூலியாக இருந்தது. யூதர்களிடமிருந்து ‘தலைவரியாக’ ரோமர்களால் வசூலிக்கப்பட்டது. (மத் 22:17, லூக் 20:24).

☞ திஷ்ரி/ஏத்தானீம்:
யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 7-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி முதல் மாதம். இது செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, இது திஷ்ரி என்று அழைக்கப்பட்டது. (1 இரா 8:2).

வெள்ளி, 26 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தா



☞ தாகோன்:
பெலிஸ்தியர்களின் தெய்வம். இந்த வார்த்தை எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், தக் (மீன்) என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (நியா 16:23; 1 சாமு 5:4).

☞ தார்க்கோல்:
கூர்மையான உலோக முனையைக் கொண்ட நீளமான தடி. விலங்குகளை ஓட்ட விவசாயிகள் இதைப் பயன்படுத்தினார்கள். ஞானமுள்ளவரின் வார்த்தைகள், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுவதால் அவை தார்க்கோலுக்கு ஒப்பிடப்படுகின்றன. அடங்காத ஒரு காளையைத் தார்க்கோலால் குத்தினாலும், அது பணிந்துபோகாமல் தார்க்கோலை உதைத்து உதைத்து தன்னையே காயப்படுத்திக்கொள்ளும். இதை வைத்துதான் “தார்க்கோலை உதைத்துக்கொண்டே இருப்பது” என்ற சொற்றொடர் வந்தது. (அப் 26:14; நியா 3:31).

☞ தாரிக்:
8.4 கிராம் எடையுள்ள பெர்சிய தங்கக் காசு. (1 நாளா 29:7).

☞ தாலந்து:
எபிரெயர்கள் பயன்படுத்திய மிகப்பெரிய எடை; இது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் எடை 34.2 கிலோ. கிரேக்க தாலந்தின் எடை இதைவிட குறைவாக இருந்தது. அதன் எடை 20.4 கிலோ. (1 நாளா 22:14; மத் 18:24).

☞ தாவீதின் நகரம்:
தாவீது எபூசு நகரத்தைக் கைப்பற்றி, தன்னுடைய அரண்மனையைக் கட்டிய பிறகு, அந்த நகரத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர். இது சீயோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது எருசலேமின் தென்கிழக்குப் பகுதி, அதன் மிகப் பழமையான இடம். (2 சாமு 5:7; 1 நாளா 11:4, 5).

☞ தாவீதின் குமாரன்:
இயேசுவைக் குறிப்பிட இந்த வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவரால்தான் கடவுளின் ராஜ்ய ஒப்பந்தம் நிறைவேற வேண்டியிருந்தது; அந்த வாரிசு இயேசுதான் என்பதைக் காட்டுவதற்கு இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. (மத். 12:23; 21:9).

☞ தானதர்மம்:
கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதற்காகக் கொடுக்கப்படுகிற தானம். இதைப் பற்றி எபிரெய வேதாகமத்தில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையைப் பற்றி இஸ்ரவேலர்களுக்குத் திருச்சட்டத்தில் திட்டவட்டமான கட்டளைகள் இருந்தன. (மத் 6:2).

வெள்ளி, 12 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ த



☞ தகன பலி:
கடவுளுக்கு முழுமையான காணிக்கையாகப் பலிபீடத்தின்மீது எரிக்கப்பட்ட மிருக பலி. காளை, ஆடு, வெள்ளாடு, புறா, புறாக்குஞ்சு ஆகியவற்றைத் தகன பலியாகக் கொடுத்தவர் அவற்றின் எந்தப் பாகத்தையும் தனக்காக எடுத்துக்கொள்ளவில்லை. (யாத் 29:18; லேவி 6:9).

☞ தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள்:
இவர்கள் கிரேக்க தத்துவ ஞானியான எப்பிக்கூரசை (கி.மு. 341-270) பின்பற்றியவர்கள். இன்பம்தான் வாழ்க்கையின் லட்சியம் என்ற கருத்து இவர்களுடைய தத்துவத்துக்கு அடிப்படையாக இருந்தது. (அப் 17:18).

☞ தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்கள்:
கிரேக்க தத்துவ ஞானிகளில் ஒரு பிரிவினர். பகுத்தறிவோடு நடந்துகொள்ளும்போதும், இயற்கையோடு ஒன்றி வாழும்போதும் சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினார்கள். இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாத நபர்தான் உண்மையான ஞானி என்றும் நம்பினார்கள். (அப் 17:18).

☞ தம்மூஸ்(1):
எருசலேமில் இருந்த விசுவாசதுரோக எபிரெயப் பெண்கள் இந்தத் தெய்வத்துக்காக அழுதார்கள். தம்மூஸ் என்பது உண்மையில் ஒரு ராஜா என்றும், அவன் இறந்ததுக்குப் பின்பு தெய்வமாக வணங்கப்பட்டான் என்றும் சொல்லப்படுகிறது. சுமேரிய எழுத்துக்களில், தம்மூஸ் என்பது டுமுசீ என்று அழைக்கப்படுகிறது. இது, கருவள தெய்வமான இனென்னாவின் (பாபிலோனிய இஷ்டாரின்) காதலன் அல்லது துணை என்று சொல்லப்படுகிறது. (எசே 8:14).

☞ தம்மூஸ்(2) பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 4-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 10-ஆம் மாதம். இது ஜூன் பாதியில் ஆரம்பித்து ஜூலை பாதியில் முடிவடைந்தது.

☞ தர்ஷீஸ் கப்பல்கள்:
பண்டைய தர்ஷீசுக்கு (தற்போதைய ஸ்பெயின்) போய் வந்த கப்பல்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். காலப்போக்கில், நீண்ட தூரம் பயணம் செய்த பெரிய கப்பல்கள் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டன. வியாபாரத்துக்காக சாலொமோனும் யோசபாத்தும் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள். (1 இரா 9:26; 10:22; 22:48).

☞ தலைப்பாகை:
தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் துணி. உயர்தர நாரிழையால் செய்யப்பட்ட தலைப்பாகையை தலைமைக் குரு கட்டியிருந்தார். நீல நிற நாடாவால் ஒரு தங்கத்தகடு அதன் முன்பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. ராஜாக்கள் தங்களுடைய கிரீடத்துக்குக் கீழே தலைப்பாகையைக் கட்டியிருந்தார்கள். நியாயம் தனக்குத் தலைப்பாகை போல இருப்பதாக யோபு சொன்னார். (யாத் 28:36, 37; யோபு 29:14; எசே 21:26).

☞ தலைமைக் குரு:
திருச்சட்டத்தின்படி, கடவுளுக்குமுன் மக்களுடைய பிரதிநிதியாகச் சேவை செய்த முக்கிய குரு. மற்ற குருமார்களை இவர் மேற்பார்வை செய்தார். “முதன்மை குரு” என்றும் அழைக்கப்பட்டார். (2நா 26:20; எஸ்றா 7:5) வழிபாட்டுக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் இருந்த மகா பரிசுத்த அறைக்குள் நுழைவதற்கு இவர் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார். பாவப் பரிகார நாளில் மட்டும்தான் அந்த அறைக்குள் இவர் போனார். “தலைமைக் குரு” என்ற நாமம் இயேசு கிறிஸ்துவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. (லேவி 16:2, 17; 21:10; மத் 26:3; எபி 4:14).

☞ தலைமைத் தூதர்:
இந்த வார்த்தைகளுக்கு “தேவதூதர்களின் தலைவர்” என்று அர்த்தம். “தலைமை” என்ற வார்த்தைக்கு “தலைவர்,” “முக்கியமானவர்” என்று அர்த்தம். வேதாகமத்தில் இந்த வார்த்தை ஒருமையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரேவொரு தலைமைத் தூதர்தான் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தலைமைத் தூதரின் பெயர் “மிகாவேல்” என்று வேதாகமம் சொல்கிறது. (தானி 12:1; யூதா 9; வெளி 12:7).

வெள்ளி, 5 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சு, சே




☞ சுருள்:
தோல் அல்லது பாப்பிரஸ் புல்லால் செய்யப்பட்ட நீளமான தாள். இதன் ஒரு பக்கத்தில் மட்டும்தான் எழுத்துக்கள் எழுதப்பட்டன. பொதுவாக, ஒரு குச்சியில் இது சுற்றப்பட்டிருந்தது. வேதவசனங்கள் இதில் எழுதப்பட்டு, பின்பு நகலெடுக்கப்பட்டன. இன்று புத்தகங்கள் பயன்படுத்தப்படுவது போல், வேதாகம காலங்களில் சுருள்கள் பயன்படுத்தப்பட்டன. (எரே 36:4, 18, 23; லூக் 4:17-20; 2 தீமொ 4:13).

☞ செங்கோல்:
ராஜா வைத்திருக்கிற கோல். இது ராஜ அதிகாரத்தைக் குறிக்கிறது. (ஆதி 49:10; எபி 1:8).

☞ செமினீத்:
“எட்டாவது” என்ற அர்த்தத்தைத் தரும் இசை சம்பந்தப்பட்ட வார்த்தை; குறைந்த சுருதியை இது அர்த்தப்படுத்தலாம். இசைக் கருவியோடு சம்பந்தப்படுத்திப் பேசும்போது, குறைந்த தொனியில் வாசிப்பதைக் குறிக்கலாம். பாடல்களோடு சம்பந்தப்படுத்திப் பேசும்போது, குறைந்த சுருதியில் இசை இசைப்பதையும் அதற்கு ஏற்ப பாடுவதையும் அர்த்தப்படுத்தலாம். (1 நாளா 15:21; சங் 6,12).

☞ சேக்கல்:
எபிரெயர்கள் பயன்படுத்திய சிறிய எடை. இது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. இது 11.4 கிராமுக்குச் சமம். எடை துல்லியமாக இருக்க வேண்டும் அல்லது வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த நிர்ணயிக்கப்பட்ட எடைக்கல்லுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக ‘பரிசுத்த சேக்கல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சாதாரண சேக்கலிலிருந்து வித்தியாசப்பட்ட ராஜ சேக்கல் என்ற ஒன்று இருந்திருக்கலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட ஓர் எடைக்கல் அரண்மனையில் இருந்திருக்கலாம். (யாத் 30:13).

☞ சேபாத்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 11-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 5-ஆம் மாதம். இது ஜனவரி பாதியில் ஆரம்பித்து பிப்ரவரி பாதியில் முடிவடைந்தது. (சக 1:7).

☞ சேராபீன்கள்:
பரலோகத்தில், கர்த்தரின் சிம்மாசனத்தைச் சுற்றியிருக்கிற தேவதூதர்கள். “எரிகிறவர்கள்” என்பது செராஃபிம் என்ற எபிரெய வார்த்தையின் நேரடி அர்த்தம். (ஏசா 6:2, 6).

☞ சேலா:
சங்கீதம், ஆபகூக் புத்தகங்களில் உள்ள இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. இது ஒப்பிப்பதையும் குறிக்கலாம். பாடும்போதோ இசை இசைக்கப்படும்போதோ அல்லது இந்த இரண்டு சமயங்களின்போதோ இடையில் சற்று நிறுத்த வேண்டும் என்பதை இது குறிக்கலாம். அமைதியாய் தியானிப்பதற்காக அல்லது உணர்ச்சிப்பூர்வமான பாடல் வரிகளை வலியுறுத்திக் காட்டுவதற்காக இந்த நிறுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். கிரேக்க செப்டுவஜன்ட் இதை டையாசால்மா என்று மொழிபெயர்த்திருக்கிறது; இதற்கு “இசை இடைவேளை” என்று அர்த்தம். (சங் 3:4; ஆப 3:3).