வெள்ளி, 27 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஏ




☞ ஏத்தானீம்:
யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 7-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி முதல் மாதம். இது செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, இது திஷ்ரி என்று அழைக்கப்பட்டது. (1 இரா 8:2).

☞ ஏதோம்:
ஈசாக்கின் மகனான ஏசாவின் இன்னொரு பெயர். ஏசாவின் (ஏதோமின்) வம்சத்தார், சவக்கடலுக்கும் ஆகாபா வளைகுடாவுக்கும் இடையிலுள்ள சேயீர் மலைப்பகுதியை ஆக்கிரமித்தார்கள். இந்தப் பகுதி பின்பு ஏதோம் என்று அழைக்கப்பட்டது. (ஆதி 25:30; 36:8).

☞ ஏபோத்:
குருமார்கள் தங்களுடைய அங்கிமேல் அணிந்திருந்த உடை. தலைமைக் குரு ஒரு விசேஷ ஏபோத்தை அணிந்திருந்தார். இதன் முன்பகுதியில் விலை உயர்ந்த 12 கற்கள் பதிக்கப்பட்ட மார்ப்பதக்கம் இருந்தது. (யாத் 28:4,6).

☞ ஏரோது:
யூதர்களை ஆட்சி செய்த ஓர் அரச பரம்பரையின் குடும்பப் பெயர். இந்த ஆட்சியாளர்கள் ரோமர்களால் நியமிக்கப்பட்டார்கள். மகா ஏரோதுதான் அப்படி முதன்முதலில் நியமிக்கப்பட்டவன். எருசலேம் ஆலயத்தைத் திரும்பக் கட்டியவனும், இயேசுவைத் தீர்த்துக்கட்டுவதற்காகப் பிள்ளைகளைக் கொல்லும்படி கட்டளையிட்டவனும் இவன்தான். (மத் 2:16; லூ 1:5) இவனுடைய ஆட்சிக்குட்பட்ட சில பகுதிகளை ஆளுவதற்கு, இவனுடைய மகன்களான ஏரோது அர்கெலாயுவும் ஏரோது அந்திப்பாவும் நியமிக்கப்பட்டார்கள். (மத் 2:22) கால்பங்கு தேசத்தை ஆட்சி செய்த ஏரோது அந்திப்பா, “ராஜா” என்று அழைக்கப்பட்டான். இவன், இயேசு ஊழியம் செய்த மூன்றரை வருஷ காலப்பகுதி முழுவதிலும், அப்போஸ்தலர் 12-ஆம் அதிகாரத்திலுள்ள சம்பவங்கள் நடந்த காலப்பகுதி வரையிலும் ஆட்சி செய்தான். (மாற் 6:14-17; லூ 3:1, 19, 20; 13:31, 32; 23:6-15; அப் 4:28; 13:1) அதற்குப் பின்பு, மகா ஏரோதுவின் பேரனான முதலாம் ஏரோது அகிரிப்பா, ஆட்சிக்கு வந்த கொஞ்சக் காலத்திலேயே தேவதூதரால் கொல்லப்பட்டான். (அப் 12:1-6, 18-23) பிறகு, இவனுடைய மகனான இரண்டாம் ஏரோது அகிரிப்பா ராஜாவானான்; யூதர்கள் ரோமர்களுக்கு எதிராகக் கலகம் செய்த காலம்வரை இவன் ஆட்சி செய்தான். (அப் 23:35; 25:13, 22-27; 26:1, 2, 19-32).

☞ ஏரோதுவின் ஆதரவாளர்கள்:
இவர்கள் ஏரோதியர்கள் என்றும் அழைக்கப்பட்டார்கள்; இவர்கள் தேசியவாத கட்சியைச் சேர்ந்தவர்கள். ரோமர்களின்கீழ் ஆட்சி செய்துகொண்டிருந்த ஏரோது ராஜாக்களின் அரசியல் லட்சியங்களை ஆதரித்தவர்கள். சதுசேயர்களில் சிலர் இந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்திருக்கலாம். இயேசுவை எதிர்ப்பதற்காக பரிசேயர்களோடு இந்த ஏரோதியர்களும் கூட்டுச் சேர்ந்துகொண்டார்கள். (மாற் 3:6).

☞ ஏறுதலின் பாடல்:
120 முதல் 134-வரையான சங்கீதங்களின் மேல்குறிப்பு. இதற்கு நிறைய அர்த்தங்கள் சொல்லப்பட்டாலும், கடவுளை வணங்க எருசலேமுக்கு ‘ஏறிப்போனபோது’ இஸ்ரவேலர்கள் இந்த 15 சங்கீதங்களையும் சந்தோஷமாகப் பாடினார்கள் என்று நிறைய பேர் நம்புகிறார்கள். முக்கியமான மூன்று வருடாந்தரப் பண்டிகைகளுக்காக, யூதா மலைகளின் உச்சியில் அமைந்திருந்த எருசலேமுக்கு இஸ்ரவேலர்கள் ஏறிப்போனார்கள்.

திங்கள், 23 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் காணப்படுகின்ற பறவைகள்

 




(இவற்றை முகப் புத்தகத்தில் பதிவேற்றிய நண்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்...)

வெள்ளி, 20 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஊ, எ




☞ ஊரீம், தும்மீம் : 
தேசத்தில் சிக்கலான பிரச்சினைகள் வந்தபோது, கர்த்தரின் தீர்மானத்தைத் தெரிந்துகொள்ள தலைமைக் குரு இவற்றைப் பயன்படுத்தினார். இவற்றால் குலுக்கல் போட்டு பார்த்தார். தலைமைக் குரு வழிபாட்டுக் கூடாரத்துக்குள் போனபோது, அவருடைய மார்ப்பதக்கத்துக்குள் இவை வைக்கப்பட்டன. பாபிலோனியர்கள் எருசலேமை அழித்த பிறகு இந்த வழக்கம் முடிவுக்கு வந்ததாகத் தெரிகிறது. (யாத். 28:30; நெகே. 7:65).

☞ எக்காளம் :
வாயினால் ஊதப்படும் உலோகக் கருவி. அறிவிப்பு செய்வதற்காகவும் இசை இசைப்பதற்காகவும் இது பயன்படுத்தப்பட்டது. இரண்டு வெள்ளி எக்காளங்களை கர்த்தர் செய்யச் சொன்னதாக எண்ணாகமம் 10:2 சொல்கிறது; மக்களை ஒன்றுகூட்டுவதற்கும், ஒரு இடத்திலிருந்து புறப்படச் செய்வதற்கும், போர் அறிவிப்பு செய்வதற்கும் வெவ்வேறு தொனிகளில் இவை ஊதப்பட்டன. மிருகங்களின் கொம்புகளில் செய்யப்பட்ட ‘ஊதுகொம்பை’ போல வளைவாக இல்லாமல் இவை நேராக இருந்திருக்கலாம். ஆலயத்தில் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளில் எக்காளங்களும் இருந்தன. ஆனால், இவை எப்படிச் செய்யப்பட்டிருந்தன என்று வேதாகமம் குறிப்பிடுவதில்லை. கர்த்தரின் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டபோதும், அவர் மூலமாகச் சில முக்கியச் சம்பவங்கள் நடந்தபோதும் அடையாள அர்த்தத்தில் எக்காளம் முழங்கப்பட்டது. (2 நாளாக. 29:26; எஸ்றா 3:10; 1 கொரி. 15:52; வெளி 8:7-11:15).

☞ எட்டி :
இது பொதுவாக, பயங்கர கசப்பும், பயங்கர வாசமும் உள்ள செடி வகைகளைக் குறிக்கிறது. இவற்றின் தண்டுகள் மிகவும் உறுதியாக இருக்கும். ஒழுக்கக்கேடு, அடிமைத்தனம், அநியாயம், விசுவாசதுரோகம் ஆகியவற்றின் கசப்பான விளைவுகளை விவரிப்பதற்கு வேதாகமம் இந்த வார்த்தையை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்துகிறது. வெளிப்படுத்துதல் 8:11-ல், “எட்டி” என்ற வார்த்தை கசப்பான, விஷத்தன்மையுள்ள ஒரு பொருளைக் குறிக்கிறது; இது அப்சிந்தே என்றும் அழைக்கப்படுகிறது. (உபா 29:18; நீதி 5:4; எரே 9:15; ஆமோ 5:7).

☞ எத்தியோப்பியா :
எகிப்தின் தெற்குப் பகுதியில் இருந்த பண்டைய தேசம். தற்போதைய எகிப்தின் தெற்குப் பகுதியும் தற்போதைய சூடானின் வடக்குப் பகுதியும் இதன் பாகமாக இருந்தன. சில இடங்களில், “கூஷ்” என்ற எபிரெயப் பெயருக்குப் பதிலாக இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எஸ்தர் 1:1).

☞ எதித்தூன் :
39, 62, 77-ஆம் சங்கீதங்களின் மேல்குறிப்பில் இருக்கும் பெயர். இதன் அர்த்தம் சரியாகத் தெரியவில்லை. ஒரு சங்கீதத்தை எப்படிப் பாட வேண்டும், அதாவது எந்தப் பாணியில் பாட வேண்டும் அல்லது எந்த இசைக் கருவி பயன்படுத்தப்பட வேண்டும் என்பதற்கான அறிவுரையாக இது இருந்திருக்கலாம். எதித்தூன் என்ற பெயரில் லேவிய இசைக் கலைஞர் ஒருவர் இருந்தார். அதனால், இந்தப் பாணி அல்லது இசைக் கருவி அவரோடோ அவருடைய மகன்களோடோ சம்பந்தப்பட்டதாக இருக்கலாம்.

☞ எப்பா :
இது ஒரு திட அளவை. தானியங்களை அளப்பதற்குப் பயன்படுத்தப்பட்ட பாத்திரமும் எப்பா என்று அழைக்கப்பட்டது. இது ஒரு பாத் அளவுக்குச் சமமாக இருந்தது. அதனால் இதன் அளவு 22 லிட்டர். (யாத் 16:36; எசே 45:10)

☞ எப்பிராயீம் :
யோசேப்பின் இரண்டாவது மகனுடைய பெயர். பிற்பாடு, ஓர் இஸ்ரவேல் கோத்திரமும் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டது. இஸ்ரவேல் தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்ட பிறகு, பத்துக் கோத்திர ராஜ்யம் முழுவதும் எப்பிராயீம் என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், எப்பிராயீம் அதன் மிக முக்கியக் கோத்திரமாக இருந்தது. (ஆதி 41:52; எரே 7:15).

☞ எபிரெயர் :
இந்தப் பட்டப்பெயர் முதன்முதலில் ஆபிராமுக்கு (ஆபிரகாமுக்கு) கொடுக்கப்பட்டது. அவர் வாழ்ந்த இடத்தைச் சுற்றியிருந்த எமோரியர்களிடமிருந்து இது அவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது. பிற்பாடு, ஆபிரகாமின் பேரனான யாக்கோபின் வம்சத்தாரைக் குறிப்பதற்காகவும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. (ஆதி 14:13; யாத் 5:3).

☞ எபிரெயு :
எபிரெயர்கள் பேசிய மொழி. இயேசுவின் காலத்துக்குள், இதில் நிறைய அரமேயிக் வார்த்தைகள் கலந்துவிட்டன. இந்த மொழியைத்தான் இயேசு கிறிஸ்துவும் அவருடைய சீஷர்களும் பேசினார்கள். (அப் 26:14).

☞ எலூல் :
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 6-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 12-ஆம் மாதம். இது ஆகஸ்ட் பாதியில் ஆரம்பித்து செப்டம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 6:15)

வெள்ளி, 13 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ உ



☞ உதவி ஊழியர் :
இதற்கான கிரேக்க வார்த்தை டையக்கொனொஸ். இந்த வார்த்தை பெரும்பாலும், “ஊழியர்” அல்லது ‘வேலையாள்’ என்று மொழிபெயர்க்கப்படுகிறது. சபையிலுள்ள மூப்பர் குழுவுக்கு உதவியாக இருப்பவர் “உதவி ஊழியர்” என்று அழைக்கப்படுகிறார். பரிசுத்த வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தகுதிகள் இருந்தால்தான் ஒருவர் உதவி ஊழியராகச் சேவை செய்ய முடியும். (1 தீமோ. 3:8-10, 12).

☞ உயிர்த்தெழுதல் :
இறந்தவர்கள் உயிரோடு எழுவது. அனஸ்டாசிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “எழுவது, நிற்பது” என்று அர்த்தம். இயேசு கிறிஸ்துவின்  உயிர்த்தெழுதலையும் சேர்த்து மொத்தம் 9 உயிர்த்தெழுதல்களைப் பற்றி வேதாகமம் சொல்கிறது.

☞ உலை, சூளை :
உலோகத் தாதுப்பொருளையோ உலோகத்தையோ உருக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகிற அமைப்பு. மண்பாத்திரங்களைச் சுடுவதற்கும் சுண்ணாம்பை எரிப்பதற்கும் பயன்படுத்தப்படுகிற அமைப்பு சூளை என்று அழைக்கப்படுகிறது. வேதாகம காலங்களில், உலையும் சூளையும் செங்கல் அல்லது கல்லால் அமைக்கப்பட்டிருந்தன. (ஆதி 15:17; தானி 3:17; வெளி 9:2).

☞ உறுதிமொழி :
ஒரு விஷயம் உண்மையென்று ஆணையிட்டுக் கொடுப்பது அல்லது ஒரு விஷயத்தைச் செய்வதாகவோ செய்யாமல் இருப்பதாகவோ சத்தியம் செய்வது. பொதுவாக, இது தன்னைவிட உயர்ந்தவரிடம், முக்கியமாகக் கடவுளிடம் நேர்ந்துகொள்வதைக் குறிக்கிறது. ஆபிரகாமிடம் செய்த ஒப்பந்தத்தை வலுப்படுத்துவதற்காக கர்த்தர் உறுதிமொழி கொடுத்தார். (ஆதி 14:22; எபி 6:16, 17).

☞ உன்னத(ம்) :
இந்த வார்த்தை மிகமிக உயர்ந்த ஸ்தானத்தைக் குறிக்கிறது. (சங் 83:18) இது பொதுவாக “கடவுள்” என்ற வார்த்தையோடும், “பேரரசர்” என்ற வார்த்தையோடும் சேர்ந்து வருகிறது. (உபா. 32:8; தானி. 7:25; சங். 78:56; 69:6; அப். 7:48) கர்த்தர் தான் மற்ற எல்லாரையும்விட மிகமிக உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிறார் என்பதை வலியுறுத்துகிறது. வேதாகமத்தில் முதன்முதலாக ஆதியாகமம் 14:18-ல் இது காணப்படுகிறது. அங்கே “உன்னதமான கடவுளுக்குச் சேவை செய்துவந்த குரு” என்று மெல்கிசேதேக்கு அழைக்கப்படுகிறார்.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ இ




☞ இகாயோன்:
இசை சம்பந்தப்பட்ட குறிப்பு. இதை சங்கீதம் 9:16-ல் பார்க்கலாம். பாட்டின் இடையில் வரும் பயபக்தியூட்டுகிற, குறைந்த சுருதியில் இசைக்கப்படுகிற யாழ் இசை அல்லது தியானிப்பதற்காகப் பாட்டின் இடையில் வரும் நிறுத்தம்.

☞ இசைக் குழுவின் தலைவன்:
சங்கீதங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள இதற்கான எபிரெய வார்த்தை, குறிப்பிட்ட விதத்தில் பாடல்களை ஒழுங்கமைத்த, அந்தப் பாடல்கள் பாடப்படுவதை மேற்பார்வை செய்த, லேவியப் பாடகர்களுக்குப் பயிற்சி கொடுத்து ஒத்திகை பார்த்த, இசை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கிய நபரைக் குறித்தது. மற்ற மொழிபெயர்ப்புகளில், “இராகத்தலைவன்” அல்லது “பாடகர் தலைவன்” என்று உள்ளது. (சங் 4 மற்றும் 5-ன் மேல்குறிப்பு).

☞ இடுக்கிகள்:
தங்கத்தால் செய்யப்பட்ட கருவிகள், பார்ப்பதற்குக் குறடு போல இருந்திருக்கலாம். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் இருந்த விளக்குகளை அணைப்பதற்கு இவை பயன்படுத்தப்பட்டன. (யாத். 37:23).

☞ இல்லிரிக்கம்:
கிரேக்கு தேசத்தின் வடமேற்கில் இருந்த ரோம மாகாணம். ஊழியத்திற்காக இல்லிரிக்கம்வரை பவுல் பயணம் செய்தார் என்று வேதாகமம் சொல்கிறது. ஆனால், அவர் இல்லிரிக்கத்தில் ஊழியம் செய்தாரா அல்லது இல்லிரிக்கம் வரைதான் ஊழியம் செய்தாரா என்று சொல்வதில்லை. (ரோமர் 15:19).

☞ இறைவாக்குரைப்பவர்:
கடவுளுடைய தீர்மானங்களைப் புரிந்துகொள்ளும் திறனை கடவுளிடமிருந்தே பெற்றவர்; மற்ற மனிதர்களுக்குத் தெரியாத விஷயங்களைப் பார்க்கவும், புரிந்துகொள்ளவும் கடவுள் இவர்களுடைய கண்களைத் திறந்திருந்தார். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “பார்ப்பது” என்று அர்த்தம். இது நேரடியாகப் பார்ப்பதையோ அடையாள அர்த்தத்தில் பார்ப்பதையோ குறிக்கலாம். ஜனங்களுக்குப் பிரச்சினை வந்தபோது, இறைவாக்கு சொல்பவரிடம் போய் ஞானமான அறிவுரைகளைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். (1 சாமு. 9:9).

☞ இஸ்ரவேல்:
யாக்கோபுக்குக் கடவுள் கொடுத்த பெயர். பிற்பாடு, ஒரே காலப்பகுதியில் வாழ்ந்த அவருடைய வம்சத்தாரை ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடப் பயன்படுத்தப்பட்டது. யாக்கோபுடைய 12 மகன்களின் வம்சத்தார் இஸ்ரவேலின் மகன்கள், இஸ்ரவேல் வம்சத்தார், இஸ்ரவேல் மக்கள் (ஆண்கள்), இஸ்ரவேலர்கள் என்றெல்லாம் பெரும்பாலும் அழைக்கப்பட்டார்கள். தெற்கு ராஜ்யத்திலிருந்து பிரிந்த பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யமும் இஸ்ரவேல் என்று அழைக்கப்பட்டது. பிற்பாடு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் “கடவுளுடைய இஸ்ரவேலர்கள்” என்று அழைக்கப்பட்டார்கள். (கலா. 6:16; ஆதி. 32:28; 2 சாமுவேல் 7:23; ரோமர் 9:6).

வியாழன், 5 அக்டோபர், 2017

ஆரம்பத்தில் தமிழ் வேதாகமத்திலிருந்து  தற்போது வழக்கொழிந்துப் போன சொற்கள்...




☞ அகத்தியம் (எஸ் 4:8) - கட்டாயம், அவசியம்

☞ அகரதமான (ஏசா 14:15) - ஆழமான

☞ அசங்கியம் (எஸ்றா 9:11) - அருவருப்பு, தூய்மையின்மை

☞ அசம்பி (1 சாமு 21:5) - பயணிகள் தோட்பை (அகராதி குறிப்பு)

☞ அஸ்திராயுதம் (எரே 50:25,51:20) - அதிகபட்ச கோபத்தில் பிரயோகிக்கும் ஒரு கொடுமையான ஆயுதம்.

☞ அஞ்சிக்கை (ஓசி 3:5) - அச்சம், பயம்

☞ அசூசம் (புலம்பல்) - தீட்டு

☞ அசுப்பு (யோபு 9:23, எரோ 4:20) - சடுதியாக, திடீரென வருதல்

☞ அபரஞ்சி பூஷணம் (நீதி 25:12) - புடமிடப்பட்ட பொன்

☞ அழுங்கு (லேவி 11:30) - எறும்பு தின்னும் ஒருவித விலங்கு

☞ அழிம்பு (எரே 6:7) - கொள்ளையும், சூறையாடுதலும்

☞ ஆரோகணம் (சங் 120-134) - இசையில் மேலேறும் ஓர் சுருதி

☞ இதமியம் (நியா 18:20) - மகிழ்ச்சியோடு உடன்படுதல்

☞ ஈசல் போடுதல் - விசிலடித்தல் (விசிலடித்து நையாண்டி செய்தல்)

☞ இளக்கரிப்பு (ஏசா 42:4) - சோர்ந்து போதல்

☞ உக்கல் (ஆப 3:16) - உறுத்துப் போதல்

☞ உசாவு துணை (யோபு 26:3) - உற்ற துணைவன்

☞ உம்பிளிக்கை (எஸ்றா 9:12) - மானியமாக கொடுக்கப்பட்ட பொருள். ஆனால் இவ்விடத்தின அர்த்தம் (நித்திய சுதந்திரம்)

☞ உறுமால் (அப் 19:12) - கைக்குட்டை துணி

☞ ஒற்தலாம் (மத் 23:23,லூக் 11:42) - ஒரு தானிய வகை. (புதினா)

☞ கடாட்சம் (உன் 8:10) - அருட்பார்வை, கருணை பெறுதல்

☞ ஏகோபித்து (நியா 20:1) - ஒருமித்து

☞ கட்டியக்காரன் (தானி 3:4) - அரசு கட்டளையை ஊரில் பறைசாட்டுவோன்

☞ கலாதி (எஸ்றா 4:15) - கலகம், சண்டை, புரட்சி

☞ கலிக்கம் (வெளி 3:18) - கண்ணிலிடும் மருந்து

☞ கிரியிருப்பவர்கள் (2 இராஜா 14:14) - பிணைக் கைதிகள்

☞ கறளை (எரே 48:6) - பிரயோஜனமில்லாத

☞ காங்கை (ஏசா 25:5) - வெப்பம்

☞ காய்மகாரம் (1சாமு 18:9) - பொறாமை

☞ கிரியாப்பிரமாணம் (ரோம 3:27) - செயல்களில் முக்தியடைய முயற்சித்தல்.

☞ கிரித்தியங்கள் (நியா 2:19) - தீய பழக்கங்கள், காலங்காலமாக விடாமல் வைத்திருக்கும் தீய கிரியைகள்

☞ குருக்கு (ஆதி 3:18) - நெருங்சில் செடி (அதிக முட்களை கொண்ட ஓர் தாவரம்)

☞ குங்கிலியம் (யாத் 30:34) - ஒருவகை நறுமணப் பொருள். (வெள்ளை குங்கிலியம், கருங்குங்கிலியம் என இரண்டு வகை இருப்பதாக தெரிகிறது)

☞ குலாரி வண்டில் (ஏசா 66:20) - மிருகங்கள் இழுத்துச்செல்லும் வண்டி. பல்லாக்கு

☞ கொறுக்கை (ஏசா 19:6) - கோரைப்புல் / நாணல்

☞ கொடி மாசி (யோபு 38:37) - நிலையற்று அலையும் மேகங்கள்

☞ கும்பு (எசே 7:14) - ஜனக்கூட்டம்

☞ கொம்மை (நெகே 3:1,11) - இவ்வார்த்தைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவ்விடத்தில் பெரிய மதில்களின் மேல் ஏற்படுத்தப்படும் காவல் மாடங்கள் என பொருள்படும்.

☞ கோரி (யோபு 21:32) - கல்லறை, சமாதி

☞ சாமாசி பண்ணும் தூதன் (யோபு 33:23) - மத்தியஸ்தர், சமரசம் செய்பவர்

☞ சம்பாரம் (எசே 24:10) - உணவில் சேர்க்கப்படும் நறுமணப் பொருள்.

☞ சலக்கரணை (2 இராஜா 4:13) - கரிசணையோடு

☞ சளுக்கு (எரே 5:28) - நயமாக பேசுதல்

☞ சன்னது (எஸ்றா 7:11) - ஆவணம், கடிதம், அரசாணை

☞ சர்ப்பனை (அப் 25:3) - வஞ்சனை, பதுங்கி இருந்து தாக்குவதற்கு சூழ்ச்சி

☞ சன்னதக்காரன் (உபா 18:11) - பில்லி சூனிய, ஏவல் வேலை செய்கிறவன்

☞ சுயம்பாகி (ஆதி 40:1) - சமையற்காரன்

☞ சீதளம் (ஆதி 8:22) - பல அர்த்தங்கள்உண்டு. குளிர்ச்சி என்ற அர்த்தம்

☞ சிரேஷ்டம் (நாகூம் 3:8) - தலை சிறந்தது.

☞ சொகுசா (எசே 1:4,8:2) - துத்தநாகமும், செம்பும் கலந்த ஓர் உலோகம்.

☞ சுணை (எரே 51:27) - கூர்மையான முட்கள் போன்ற கொடுக்கு.

☞ தகசுத்தோல் (யாத் 25:5,26:14) - கடற்பசுவின் தோல், (நீர் நாய், நீர் பசு)

☞ தஸ்திர அறை (எஸ் 6:1) - பத்திரங்கள், அரசு ஆவணங்கள் வைக்கும் அறை

☞ தர்ப்பணம் (யாத் 38:8) - கண்ணாடி (வெண்கல கண்ணாடி)

☞ தாக்கீது (தானி 6:7,8,12) - ஆணை