வெள்ளி, 24 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கு



☞ கும்பம்:
ஒரு தூணின் உச்சியில் வேலைப்பாடுகளுடன் அமைந்த பகுதி. சாலொமோனுடைய ஆலயத்தின் முன்னால் யாகீன், போவாஸ் என்ற இரண்டு தூண்கள் இருந்தன. (1 இரா. 7:16)

☞ குயவர்:
மண் பானைகளையும் மற்ற மண் பாத்திரங்களையும் செய்பவர். இதற்கான எபிரெய வார்த்தைக்கு “உருவாக்குபவர்” என்று அர்த்தம். களிமண்மீது குயவருக்கு இருக்கிற அதிகாரத்தைப் பற்றி வேதாகமம் குறிப்பிடுகிறது. மக்களையும் தேசங்களையும் ஆட்சி செய்கிற உரிமை கர்த்தருக்கு இருக்கிறது என்பதை விளக்குவதற்கு வேதாகமம் பெரும்பாலும் இந்த உதாரணத்தைப் பயன்படுத்துகிறது. (ஏசா 64:8; ரோ 9:21).

☞ குலதெய்வச் சிலைகள்:
சில சமயங்களில், குறி கேட்பதற்காக இவை பயன்படுத்தப்பட்டன. (எசே 21:21) சில சிலைகள், உருவத்திலும் உயரத்திலும் மனிதனைப் போல் இருந்தன. மற்ற சிலைகளோ, சிறியவையாக இருந்தன. (ஆதி 31:34; 1சா 19:13, 16) இந்தச் சிலைகளை வைத்திருந்தவருக்குப் பரம்பரைச் சொத்து கிடைத்தது என்பதை மெசொப்பொத்தாமியாவில் நடந்த புதைபொருள் ஆராய்ச்சியின் கண்டுபிடிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. (ராகேல் தன் அப்பாவிடமிருந்து குலதெய்வச் சிலையை எடுத்ததற்கான காரணம் இதிலிருந்து புரிகிறது.) ஆனால், இஸ்ரவேலில் இந்த வழக்கம் இருந்ததாகத் தெரியவில்லை. நியாயாதிபதிகளின் காலத்திலும், ராஜாக்களின் காலத்திலும் குலதெய்வச் சிலைகளை மக்கள் வழிபட்டார்கள்; உண்மையுள்ள ராஜாவான யோசியா, மற்ற பொருள்களோடு சேர்த்து குலதெய்வச் சிலைகளையும் அழித்துப்போட்டார். (நியா 17:5; 2ரா 23:24; ஓசி 3:4).

☞ குலுக்கல்:
தீர்மானங்களை எடுப்பதற்காகக் குலுக்கல் போடப்பட்டது. கூழாங்கற்கள், சிறிய மரத்துண்டுகள் அல்லது கற்கள் ஆகியவை குலுக்கிப் போடப்பட்டன. உடையின் மடிப்புகளில் அல்லது பாத்திரங்களில் போடப்பட்டு பின்பு குலுக்கப்பட்டன. அதிலிருந்து வெளியே வந்து விழுந்த அல்லது வெளியே எடுக்கப்பட்ட ஒன்றுதான் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கருதப்பட்டது. ஜெபத்துக்குப் பின்புதான் பெரும்பாலும் குலுக்கல் போடப்பட்டது. “குலுக்கல்” என்பதற்கான மூலமொழி வார்த்தைக்கு, “பங்கு” அல்லது “சொத்து” என்ற அர்த்தங்களும் உள்ளன. (யோசு 14:2; சங் 16:5; நீதி 16:33; மத் 27:35).

☞ குற்ற நிவாரண பலி:
தான் செய்த பாவங்களுக்காக ஒருவர் செலுத்தும் பலி. இது மற்ற பாவப் பரிகார பலிகளிலிருந்து சற்று வித்தியாசமானது. பாவம் செய்ததால் இழந்துவிட்ட சில ஒப்பந்த உரிமைகளை மறுபடியும் பெற்றுக்கொள்வதற்காகவும், தண்டனையிலிருந்து விடுபடுவதற்காகவும், மனம் திருந்திய ஒருவர் செலுத்துகிற பலி. (லேவி 7:37; 19:21, 22; ஏசா 53:10).

வெள்ளி, 17 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கா, கி, கீ



☞ காவல்காரர்:
முக்கியமாக, ராத்திரி நேரத்தில் மக்களையும் உடைமைகளையும் பாதுகாப்பவர். ஆபத்து வருவதைப் பார்த்தால் மற்றவர்களை எச்சரிப்பார். நகரத்தை நோக்கி வருபவர்களைத் தூரத்திலேயே பார்ப்பதற்கு வசதியாக, இவர் பெரும்பாலும் நகரத்து மதில்களில் அல்லது கோபுரங்களில் நிறுத்தப்பட்டார். படைப்பிரிவில் இருந்த காவல்காரர், காவலாளி என்றும் படைக்காவலர் என்றும் அழைக்கப்படுகிறார். தீர்க்கதரிசிகள் அடையாள அர்த்தத்தில் இஸ்ரவேல் தேசத்துக்குக் காவல்காரர்களாக இருந்து, வரப்போகிற அழிவைப் பற்றி எச்சரித்தார்கள். (2 இரா 9:20; எசே 3:17).

☞ கானான்:
நோவாவின் பேரன்; காமின் நான்காவது மகன். கானானின் வம்சத்தில் வந்த 11 கோத்திரத்தார் காலப்போக்கில் மத்தியதரைக் கடலின் கிழக்கே, எகிப்துக்கும் சீரியாவுக்கும் இடையிலுள்ள பகுதியில் குடியிருந்தார்கள். இந்தப் பகுதிதான் ‘கானான் தேசம்’ என்று அழைக்கப்பட்டது. (லேவி 18:3; ஆதி 9:18; அப் 13:19).

☞ கித்தீத்:
இசை சம்பந்தப்பட்ட இந்த வார்த்தையின் சரியான அர்த்தம் தெரியவில்லை. காத் என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கலாம். இந்த வார்த்தை திராட்சரச ஆலையைக் குறிக்கிறது. அதனால், கித்தீத் என்ற வார்த்தை திராட்சமது தயாரிக்கப்பட்ட சமயத்தில் பாடப்பட்ட பாடல்களின் இசையாக இருக்கலாம் என்று சிலர் சொல்கிறார்கள். (சங் 81).

☞ கிரேக்கர்கள்:
கிரேக்கு தேசத்தில் பிறந்தவர்கள் அல்லது கிரேக்கு தேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். யூதரல்லாத மக்களையும், கிரேக்க மொழி மற்றும் கலாச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் இருந்தவர்களையும்கூட கிரேக்கர்கள் என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் சொல்கிறது. (யோவே 3:6; யோவா 12:20).

☞ கிரேக்கு:
கிரேக்கு தேசத்து மக்கள் பேசும் மொழி.

☞ கிறிஸ்தவர்கள்:
இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள். (அப் 11:26; 26:28).

☞ கிறிஸ்து:
இயேசுவின் பட்டப்பெயர். இது கிறிஸ்டோஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது. இதற்கான எபிரெய வார்த்தை, “மேசியா,” அதாவது “அபிஷேகம் செய்யப்பட்டவர்” என்று மொழிபெயர்க்கப்படுகிறது. (மத் 1:16; யோவா 1:41).

☞ கிஸ்லே:
யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பின்பு பயன்படுத்திய பரிசுத்த காலண்டரின்படி 9-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 3-ஆம் மாதம். இது நவம்பர் பாதியில் ஆரம்பித்து டிசம்பர் பாதியில் முடிவடைந்தது. (நெ 1:1; சக 7:1).

☞ கீலேயாத்:
யோர்தான் ஆற்றின் கிழக்கே, யாபோக் பள்ளத்தாக்கின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிவரை பரந்து விரிந்திருந்த செழிப்பான இடம்தான் கீலேயாத். ஆனால், யோர்தானுக்குக் கிழக்கே ரூபன், காத் மற்றும் மனாசேயின் பாதிக் கோத்திரத்தார் குடியிருந்த இஸ்ரவேல் பகுதி முழுவதையும் குறிப்பதற்காகக்கூட இந்த வார்த்தை சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (எண் 32:1; யோசு 12:2; 2ரா 10:33).

வெள்ளி, 10 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ க


☞ கடைசி நாட்கள்:
வரலாற்றுச் சம்பவங்கள் உச்சக்கட்டத்தை அடையும் சமயத்தைக் குறிப்பதற்காக வேதாகம தீர்க்கதரிசனங்கள் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றன. (எசே 38:16; தானி 10:14; அப் 2:17) கடைசி நாட்கள் என்பது சில வருஷங்களையோ பல வருஷங்களையோ குறிக்கலாம், இது அந்தந்த தீர்க்கதரிசனத்தைப் பொறுத்தே இருக்கிறது. முக்கியமாக, இந்தச் சகாப்தத்தின் ‘கடைசி நாட்களை’ குறிப்பதற்கு இந்த வார்த்தைகளை வேதாகமம் பயன்படுத்துகிறது. இது இயேசு கிறிஸ்துவுடைய பிரசன்னத்தின் சமயமாக இருக்கிறது. (2 தீ 3:1; யாக் 5:3; 2 பேதுரு 3:3).

☞ கண்காணி:
சபையை வழிநடத்தி, அதை நன்றாகக் கவனித்துக்கொள்கிற ஆண்; இது அவருடைய மிக முக்கியப் பொறுப்பு. பாதுகாப்பான மேற்பார்வை என்ற அர்த்தத்தைத் தரும் எப்பிஸ்கோபஸ் என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து இந்த வார்த்தை வந்திருக்கிறது. கிறிஸ்தவ சபையில், “கண்காணி,” “மூப்பர்” (பிரஸ்பிட்டிரோஸ்) ஆகிய இரண்டு வார்த்தைகளும் ஒரே ஸ்தானத்தைக் குறிக்கின்றன. “மூப்பர்” என்ற வார்த்தை, நியமிக்கப்பட்டவருக்கு இருக்கிற முதிர்ச்சியான குணங்களைச் சுட்டிக்காட்டுகிறது. “கண்காணி” என்ற வார்த்தை நியமிக்கப்பட்டவரின் கடமைகளைச் சுட்டிக்காட்டுகிறது. (அப் 20:28; 1தீ 3:2-7; 1 பேது 5:2).

☞ கதிர் பொறுக்குதல்:
அறுவடை செய்பவர்கள் தெரிந்தோ தெரியாமலோ விட்டுவிடும் கதிர்களை மற்றவர்கள் சேகரிக்கிற ஒரு வழக்கம். அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் இருக்கிற கதிர்களை முழுமையாக அறுக்கக் கூடாது என்றும், ஒலிவப் பழங்களையும், திராட்சைப் பழங்களையும் முழுமையாக அறுவடை செய்யக் கூடாது என்றும் திருச்சட்டம் கட்டளையிட்டிருந்தது. அறுவடைக்குப் பிறகு மீதியாக இருப்பதை எடுத்துக்கொள்கிற உரிமையை ஏழைகளுக்கும், பாவப்பட்டவர்களுக்கும், வேறு நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கும், அப்பா இல்லாத பிள்ளைகளுக்கும், விதவைகளுக்கும் கடவுள் கொடுத்திருந்தார். (ரூத் 2:7).

☞ கப்பம்:
ஓர் அரசாங்கம் அல்லது ஓர் ஆட்சியாளர் வேறொரு அரசாங்கத்துக்கு அல்லது ஆட்சியாளருக்கு அடிபணிவதைக் காட்டுவதற்காகவோ, அவரோடு சமாதானமாக இருப்பதற்காகவோ அவருடைய பாதுகாப்பைப் பெறுவதற்காகவோ செலுத்துகிற பணம் அல்லது பொருள். (2 ராஜா 3:4; 18:14-16; 2 நாளா 17:11) தனி நபர்கள்மீது விதிக்கப்படுகிற வரியையும் இது குறிக்கிறது. (நெகே 5:4, ரோமர் 13:7).

☞ கரண்டிகள்:
தங்கம், வெள்ளி அல்லது செம்பால் இவை செய்யப்பட்டிருந்தன. வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் தூபப்பொருளை எரிக்கவும், பலிபீடத்திலிருந்து தணலை அள்ளவும், தங்கக் குத்துவிளக்கில் இருந்த தீய்ந்துபோன திரிகளை எடுக்கவும் இவை பயன்படுத்தப்பட்டன. இவை தூபக்கரண்டிகள் என்றும் அழைக்கப்பட்டன. (யாத் 37:23; 2 நாளா 26:19; எபி 9:4).

☞ கருவாய்ப்பட்டை:
கருவாய்ப்பட்டை மரத்திலிருந்து (சினமோமம் காஸியா) கிடைக்கும் பொருள். இந்த மரம், லவங்கப்பட்டை மர வகையைச் சேர்ந்தது. நறுமணப் பொருளாகவும் பரிசுத்த அபிஷேகத் தைலம் செய்வதற்காகவும் கருவாய்ப்பட்டை பயன்படுத்தப்பட்டது. (யாத் 30:24; சங் 45:8; எசே 27:19).

☞ கல்தேயா, கல்தேயர்கள்:
ஆரம்பத்தில் டைகிரீஸ் மற்றும் யூப்ரடிஸ் ஆறுகளின் டெல்டா பகுதிதான் கல்தேயா தேசமாக இருந்தது; அங்கே வாழ்ந்த மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். காலப்போக்கில், பாபிலோன் முழுவதும் கல்தேயா என்று அழைக்கப்பட்டது, பாபிலோனிய மக்கள் கல்தேயர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். அறிவியல், வரலாறு, வானவியல், மொழிகள் ஆகியவற்றில் புலமை பெற்றவர்களையும், அதேசமயத்தில் மாயமந்திரம், ஜோதிடம் ஆகியவற்றில் ஈடுபட்டவர்களையும் குறிப்பிடுவதற்குக்கூட “கல்தேயர்கள்” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டது. (எஸ்றா 5:12; தானி 4:7).

☞ கல்லறை:
சில சமயங்களில், இந்த வார்த்தை தனிப்பட்ட ஒருவருடைய கல்லறையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்ற சமயங்களில், இறந்தவர்களின் நிலையைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான எபிரெய வார்த்தை “ஷியோல்”; கிரேக்க வார்த்தை “ஹேடீஸ்.” எல்லா செயல்களும் எல்லா நினைவுகளும் முடிவுக்கு வருகிற அடையாளப்பூர்வ இடம் அல்லது நிலை என வேதாகமம் விவரிக்கப்பட்டுள்ளது. (ஆதி 47:30).

☞ கவண்:
தோலாலான ஒரு பட்டை அல்லது மிருகங்களின் தசை நாண்கள், நாணல்கள், முடி ஆகியவற்றைக் கொண்டு பின்னப்பட்ட ஒரு வார். இதனுடைய அகலமான நடுப்பகுதியில், வீசியெறிய வேண்டிய பொருள் (பெரும்பாலும், கல்) வைக்கப்பட்டது. கவணின் ஒரு முனை, கையில் அல்லது மணிக்கட்டில் கட்டப்பட்டது; மறுமுனை இன்னொரு கையால் பிடித்துக்கொள்ளப்பட்டு, இழுத்துவிடப்பட்டது. பண்டைய தேசங்கள், கவண்கல் எறிகிறவர்களைத் தங்கள் படையில் வைத்திருந்தன. (நியா 20:16; 1 சாமு 17:50).

☞ களத்துமேடு:
தானியம் போரடிக்கப்பட்ட இடம்; இது வட்டமாகவும் சமதளமாகவும் இருந்தது. பெரும்பாலும், நன்றாகக் காற்று வீசுகிற உயரமான இடத்தில் இவை அமைக்கப்பட்டிருந்தன. (ரூத் 3:2; மத் 3:12).

வியாழன், 2 நவம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ஒ, ஓ



☞ ஒப்பந்தம்:
ஏதோ ஒன்றைச் செய்வதற்கோ செய்யாமல் இருப்பதற்கோ, கடவுளுக்கும் மனிதர்களுக்கும் நடுவில் அல்லது இரண்டு மனிதர்களுக்கு நடுவில் செய்யப்படுகிற உடன்படிக்கை. சில சமயங்களில், ஒருவர் மட்டுமே ஒப்பந்தத்தில் சொல்லப்பட்டபடி செய்ய வேண்டியிருந்தது (இது ஒரு வாக்குறுதியாக இருந்தது). மற்ற சமயங்களில், இரண்டு தரப்பினருமே அந்த ஒப்பந்தத்தின்படி செய்ய வேண்டியிருந்தது. கடவுள் மனிதர்களோடு செய்த ஒப்பந்தங்களைப் பற்றியும் தனி நபர்களும், கோத்திரங்களும், தேசங்களும், மக்கள் தொகுதிகளும் தங்களுக்குள் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பற்றியும் வேதாகமம் சொல்கிறது. ஆபிரகாமோடும், தாவீதோடும், இஸ்ரவேல் தேசத்தோடும் (திருச்சட்ட ஒப்பந்தம்), கடவுளுடைய இஸ்ரவேலர்களோடும் (புதிய ஒப்பந்தம்) கடவுள் செய்த ஒப்பந்தங்கள் மிக முக்கியமானவை. இவற்றைப் போன்ற ஒப்பந்தங்களால் நீண்ட கால நன்மைகள் கிடைத்திருக்கின்றன. (ஆதி 9:11; 15:18; 21:27; யாத் 24:7; 2 நாளா 21:7).

☞ ஓமர்:
இது ஒரு திட அளவை. 2.2 லிட்டருக்குச் சமம்; அதாவது எப்பாவில் பத்திலொரு பங்கு. (யாத் 16:16, 18).

☞ ஓய்வுநாள்:
இதற்கான எபிரெய வார்த்தைக்கு, “ஓய்வு எடுப்பது; நிறுத்துவது” என்று அர்த்தம். யூத வாரத்தின் ஏழாவது நாள். (வெள்ளிக்கிழமை சூரிய அஸ்தமனத்திலிருந்து சனிக்கிழமை சூரிய அஸ்தமனம்வரை) சில பண்டிகை நாட்களும் ஓய்வுநாட்களாக இருந்தன. ஆலயத்தில் செய்யப்பட்ட குருத்துவச் சேவைகளைத் தவிர, ஓய்வுநாளில் வேறெந்த வேலையையும் செய்ய யாரும் அனுமதிக்கப்படவில்லை. 7-ஆம் மற்றும் 50-ஆம் வருஷங்கள் ஓய்வு வருஷங்கள் என்று அழைக்கப்பட்டன. ஓய்வு வருஷங்களில், நிலம் பயிர் செய்யப்படாமல் அப்படியே விடப்பட்டது. அதோடு, கடனைத் திருப்பித் தர வேண்டும் என்று எபிரெயர்கள் தங்கள் சகோதரர்களைக் கட்டாயப்படுத்தவில்லை. ஓய்வுநாள் பற்றிய திருச்சட்ட விதிமுறைகள் நியாயமாக இருந்தன. ஆனால், காலப்போக்கில் மதத்தலைவர்கள் வேறுபல விதிமுறைகளையும் அதனோடு சேர்த்தார்கள். அதனால், இயேசுவின் நாட்களில் வாழ்ந்த மக்களுக்கு அவற்றைக் கடைப்பிடிப்பது கஷ்டமாக இருந்தது. (யாத் 20:8; லேவி 25:4; லூக் 13:14-16; கொலோ 2:16).

☞ ஓரேப்:
ஓரேப் மலை.
சீனாய் மலையைச் சுற்றியுள்ள மலைப்பகுதி ஓரேப் என்று அழைக்கப்பட்டது. சீனாய் மலை, ஓரேப் மலை என்றும் அழைக்கப்பட்டது. (யாத் 3:1; உபா 5:2).