வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தெ, தே




☞ தெக்கப்போலி:
பல கிரேக்க நகரங்கள் அடங்கிய பகுதி; ஆரம்பத்தில், பத்து நகரங்கள் இதில் இருந்தன. (தெக்கா என்ற கிரேக்க வார்த்தைக்கு “பத்து” என்றும், போலிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “நகரம்” என்றும் அர்த்தம்.) இந்த நகரங்களில் பெரும்பாலானவை யோர்தான் ஆறு மற்றும் கலிலேயா கடலின் கிழக்குப் பகுதியில் இருந்தன. இந்தப் பகுதியும் தெக்கப்போலி என்று அழைக்கப்பட்டது. இந்த நகரங்கள், கிரேக்க கலாச்சார மையமாகவும் வர்த்தக மையமாகவும் இருந்தன. இயேசு இந்தப் பகுதி வழியாகப் பயணம் செய்தார். ஆனால், இந்த நகரங்களுக்குள் போனதாக எந்தப் பதிவும் இல்லை. (மத் 4:25; மாற் 5:20).

☞ தேபேத்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 10-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 4-ஆம் மாதம். இது டிசம்பர் பாதியில் ஆரம்பித்து ஜனவரி பாதியில் முடிவடைந்தது. பொதுவாக, ‘பத்தாம் மாதம்’ என அழைக்கப்படுகிறது. (எஸ்தர் 2:16).

☞ தேவதூதர்கள்:
இதற்கான எபிரெய வார்த்தை மாலக்; கிரேக்க வார்த்தை ஆகிலோஸ். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் “தூதுவர்” என்று அர்த்தம். பரலோகத் தூதுவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “தூதர்கள்,” ‘தேவதூதர்கள்’ என்று இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (ஆதி 16:7; 32:3, யாக் 2:25; வெளி 22:8) மனிதர்களைப் படைப்பதற்குப் பல காலத்துக்கு முன்பே கடவுள் இந்தத் தேவதூதர்களைப் படைத்தார். இவர்களுக்கு அபார பலம் இருக்கிறது. இவர்களை “பரிசுத்த தூதர்கள்,” “கடவுளின் மகன்கள்,” “விடியற்கால நட்சத்திரங்கள்” என்று பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுகிறது. (உபா 33:2; யோபு 1:6, 38:7) இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இவர்கள் படைக்கப்படவில்லை, தனித்தனி நபர்களாகப் படைக்கப்பட்டார்கள். இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். (தானி 7:10) ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒரு பெயர் இருப்பதாகவும், தனித்தன்மை இருப்பதாகவும் வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது; அப்படியிருந்தும், மனிதர்களிடமிருந்து வணக்கத்தைப் பெற மறுத்து மனத்தாழ்மையைக் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான தேவதூதர்கள் தங்களுடைய பெயரைக்கூட சொன்னதில்லை. (ஆதி 32:29; லூ 1:26; வெளி 22:8, 9) அவர்களுக்கு வித்தியாசமான ஸ்தானங்களும் பொறுப்புகளும் இருக்கின்றன. கர்த்தரின் சிம்மாசனத்துக்கு முன்னால் சேவை செய்வது, அவருடைய செய்திகளை மற்றவர்களுக்குச் சொல்வது, பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களுக்கு உதவி செய்வது, அவருடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவது, பிரசங்க வேலையை ஆதரிப்பது என நிறைய பொறுப்புகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. (2 இரா 19:35; சங் 34:7; லூக் 1:30, 31; வெளி 5:11; 14:6) எதிர்காலத்தில் நடக்கப்போகும் அர்மகெதோன் போரில் இவர்கள் இயேசுவோடு சேர்ந்து போரிடுவார்கள். (வெளி 19:14, 15).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக