அல்லேலூயா, ஆமென் ;
அல்லேலூயா
“அல்லேலூயா” என்பது இரண்டு வார்த்தைகளின் கூட்டு (அல்லேலூயா = அல்லேலூ + யா)
“அல்லேலூயா” என்றால் “யா என்பவரை துதியுங்கள்” (கர்த்தரை நீங்கள் துதியுங்கள் அல்லது கர்த்தரை துதியுங்கள்) என்று அர்த்தமாகும். ஒரு சில பண்டிதர்கள் “தேவனுக்கே மகிமை” என்றும் இதன் அர்த்ததை சொல்லுவார்கள்.
“அல்லேலூயா” என்ற பதம் பழைய ஏற்பாட்டில் மொத்தம் 24 முறை வருகிறது. அதுவும் சங்கீத புஸ்தகத்தில் மட்டும் தான் வருகிறது.
இப்பதம் புதிய ஏற்பாட்டில் மொத்தம் 4 முறைதான் வருகிறது. அதுவும் வெளிப்படுத்தின விசேஷத்தில் மட்டும் தான் வருகிறது (வெளி 19அதி).
இந்தப்பதம் 7 சங்கீதங்களில் ஒவ்வொருமுறை வருகிறது (104, 105, 111, 112,115,116,117) 7 சங்கீதங்களில் இரண்டுமுறை வருகிறது (106, 113, 135, 146, 147, 149, 150) ஒரு சங்கீதத்தில் மட்டும் 3 முறை வருகிறது (148).
வேதத்திலே முதன் முதலா அல்லேலூயா என்ற வார்த்தை சங் 104:35-ல் தான் வருகிறது. கடைசியாக வெளி 19:6-ல் வருகிறது.
ஆமென்
“ஆமென்” என்ற எபிரெய வார்த்தை, ஆங்கிலத்திலும் கிரேக்குவிலும் எழுத்துப்பெயர்ப்பு செய்யப்பட்டிருக்கிறது. ஜெபம், ஆணை, ஆசீர்வாதம், சாபம் ஆகியவற்றைக் கேட்ட பிறகு கடைசியில் எல்லாரும் சேர்ந்து சொல்கிற அந்த வார்த்தை, “அப்படியே ஆகட்டும்” அல்லது “நிச்சயமாகவே” என்ற அர்த்தத்தைத் தருகிறது. அது, சொல்லப்பட்ட விஷயங்களை உள்ளப்பூர்வமாகவும் உணர்ச்சிப்பூர்வமாகவும் ஆமோதிப்பதைக் குறிக்கிறது. அந்த வார்த்தை “நிச்சயமானது, உண்மையானது, நம்பகமானது, சந்தேகத்திற்கு இடமில்லாதது என்றெல்லாம் அர்த்தப்படுத்துகிறது.” வேதாகம காலங்களில், ஒருவர் ஆணையிட்டபோதோ ஒப்பந்தம் செய்தபோதோ மற்றவர் “ஆமென்” என்று சொன்னது, சட்டப்படி அதற்குக் கட்டுப்பட்டு நடக்க அவர் ஒப்புக்கொண்டதைக் காட்டியது; அதாவது, அவர் அதை ஏற்றுக்கொண்டதையும், அதை மீறும்போது வரும் விளைவுகளைச் சந்திக்கத் தயாராய் இருந்ததையும் காட்டியது. (உபாகமம் 27:15-26).
இயேசு பிரசங்கித்தபோதும் போதித்தபோதும் சில குறிப்புகளைச் சொல்ல ஆரம்பிக்கையில் “ஆமென்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அதன் மூலம், தாம் சொல்லவிருந்த விஷயம் எந்தளவு நம்பகமானது என்பதை வலியுறுத்திக் காட்டினார். அந்தச் சந்தர்ப்பங்களில் “ஆமென்” என்ற வார்த்தை, “உண்மையாகவே” அல்லது “மெய்யாகவே” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (மத்தேயு 5:18; 6:2,5) யோவானின் சுவிசேஷம் முழுவதிலும் காணப்படுவதுபோல், “ஆமென்” என்ற வார்த்தையை இயேசு இருமுறை பயன்படுத்திய சந்தர்ப்பங்களில் அது “உண்மையாகவே உண்மையாகவே” என மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. (யோவான் 1:51) இப்படி அவர் அதை இருமுறை பயன்படுத்தியிருப்பதை சுவிசேஷப் புத்தகங்களில் மட்டுமே காண முடிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக