வெள்ளி, 29 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சீ




☞ சீயுஸ்:
கிரேக்கர்கள் வழிபட்ட ஏராளமான தெய்வங்களில் இது மிக முக்கியமான தெய்வம். லீஸ்திராவில் இருந்த மக்கள் பர்னபாவை சீயுஸ் என்று தவறாக நினைத்தார்கள். லீஸ்திராவுக்குப் பக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பழங்கால கல்வெட்டுகளில், “சீயுசின் பூசாரிகள்,” “சூரியக் கடவுளாகிய சீயுஸ்” ஆகிய வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. மெலித்தா தீவிலிருந்து பவுல் பயணம் செய்த கப்பலின் முன்பகுதியில் “சீயுசின் மகன்களுடைய” சின்னங்கள், அதாவது, இரட்டைச் சகோதரர்களான கேஸ்டர் மற்றும் போலக்ஸின் சின்னங்கள் இருந்தன. (அப் 14:12; 28:11).

☞ சீயோன்; சீயோன் மலை:
எபூசியர்களின் கோட்டை நகரமாகிய எபூசுவின் பெயர்தான் சீயோன். இது எருசலேமின் தென்கிழக்கு மலைமீது இருந்தது. தாவீது இந்த நகரத்தைக் கைப்பற்றிய பின்பு, இங்கே தன் அரண்மனையைக் கட்டினார். இது “தாவீதின் நகரம்” என்று அழைக்கப்பட்டது. (2சா 5:7, 9) உடன்படிக்கைப் பெட்டியை தாவீது சீயோனுக்குக் கொண்டுவந்த பின்பு, இந்த மலை கர்த்தருக்குப் பரிசுத்தமான மலையாக ஆனது. பிற்பாடு, இந்தப் பெயர் மோரியா மலைமீது இருந்த ஆலயப் பகுதியையும், சில சமயங்களில், எருசலேம் நகரம் முழுவதையும் குறித்தது. சில இடங்களில் வேதாகமத்தில், இந்தப் பெயர் பெரும்பாலும் அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. (சங் 2:6; 1 பேது 2:6; வெளி 14:1).

☞ சீரியா; சீரியர்கள்/அராம்; அரமேயர்கள்:
இவர்கள் சேமின் மகனாகிய அராமின் வம்சத்தில் வந்தவர்கள். லீபனோன் மலைகளிலிருந்து மெசொப்பொத்தாமியா வரையுள்ள பகுதிகளிலும், வடக்கே டாரஸ் மலைகளிலிருந்து தெற்கே தமஸ்கு வரையிலும் அதற்கு அப்பால் இருக்கிற பகுதிகளிலும் இவர்கள் வாழ்ந்து வந்தார்கள். எபிரெய மொழியில் அராம் என்று அழைக்கப்பட்ட இந்தப் பகுதி பிற்பாடு சீரியா என்று அழைக்கப்பட்டது. அதில் குடியிருந்தவர்கள் சீரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். (ஆதி 25:20; உபா 26:5; ஓசி 12:12).

☞ சீவான்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 3-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 9-ஆம் மாதம். இது மே பாதியில் ஆரம்பித்து ஜூன் பாதியில் முடிவடைந்தது. (எஸ்தர் 8:9).

☞ சீஸர்:
இது ரோமர்களின் குடும்பப் பெயராக இருந்தது, பிற்பாடு ரோமப் பேரரசர்களின் பட்டப்பெயராக ஆனது. அகஸ்து, திபேரியு, கிலவுதியு ஆகியோரின் பெயர்கள் வேதாகமத்தில் உள்ளன. நீரோவின் பெயர் வேதாகமத்தில் இல்லையென்றாலும் இந்தப் பட்டப்பெயர் அவருக்கும் பொருந்துகிறது. சில இடங்களில் வேதாகமத்தில், மனித ராஜியத்தைக் குறிப்பதற்கும் இந்தப் பட்டப்பெயர் பயன்படுத்தப்பட்டுள்ளது.(மாற் 12:17, அப் 25:12).

வெள்ளி, 22 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சா, சி



☞ சாண்:
நீளத்தை அளப்பதற்கான அளவை. தோராயமாக, கையை விரிக்கும்போது கட்டை விரலின் நுனிக்கும் சுண்டு விரலின் நுனிக்கும் இடையிலுள்ள தூரத்துக்குச் சமம். 44.5 சென்டிமீட்டருள்ள முழத்தின் அடிப்படையில், ஒரு சாண் என்பது 22.2 சென்டிமீட்டர் நீளம் இருக்கலாம். (யாத் 28:16; 1 சாமு 17:4).

☞ சாத்தான்:
“எதிர்ப்பவன்” என்பது இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். வேதாகமத்தில் பிசாசாகிய சாத்தானைக் குறிக்கிறது. (யோபு 1:6; மத் 4:10; வெளி 12:9).

☞ சாம்பிராணி:
பாஸ்வெலியா இனத்தைச் சேர்ந்த சில குறிப்பிட்ட வகை மரங்களிலிருந்தும் புதர்ச்செடிகளிலிருந்தும் கிடைத்த காய்ந்த பிசின். இதை எரிக்கும்போது, நல்ல வாசனை வரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்ட பரிசுத்த தூபப்பொருளில் இதுவும் கலக்கப்பட்டிருந்தது. உணவுக் காணிக்கையோடு சேர்த்து இதுவும் கொடுக்கப்பட்டது. பரிசுத்த அறையில் வைக்கப்பட்டிருந்த படையல் ரொட்டிகளின் ஒவ்வொரு அடுக்கின்மீதும் இது தூவப்பட்டது. (யாத் 30:34-36; லேவி 2:1; 24:7; மத் 2:11).

☞ சாலொமோன் மண்டபம்:
இயேசுவின் காலத்தில், ஆலயத்தின் வெளிப்பிரகாரத்துக்குக் கிழக்கே இருந்த நடைபாதை; இதன்மீது கூரை போடப்பட்டிருந்தது. இது, முன்பு சாலொமோன் கட்டிய ஆலயத்தின் பாகமாக இருந்ததென பொதுவாக நம்பப்படுகிறது. ‘குளிர்காலத்தில்’ இயேசு இங்கே நடந்தார். ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக்காக இங்கே கூடினார்கள். (யோவா 10:22, 23; அப் 5:12).

☞ சியா.
ஒரு திட அளவை. திரவ அளவையான பாத்தின் அடிப்படையில், இது 7.33 லிட்டருக்குச் சமம். (2 இரா 7:1).

☞ சிர்ட்டிஸ்:
வட ஆப்பிரிக்காவில் இருக்கும் லீபியா நாட்டின் கடலோரத்தில் உள்ள ஆழமில்லாத இரண்டு பெரிய வளைகுடாக்கள். அவற்றில் இருந்த மணல்திட்டுகள், அலைகளால் இடம் மாறிக்கொண்டே இருந்ததால், பூர்வகால மாலுமிகள் அவற்றை நினைத்து பயப்பட்டார்கள். (அப் 27:17).

☞ சிவ்:
யூதர்களுடைய பரிசுத்த காலண்டரின்படி 2-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 8-ஆம் மாதம். இது ஏப்ரல் பாதியில் ஆரம்பித்து மே பாதியில் முடிவடைந்தது. பாபிலோன் சிறையிருப்புக்குப் பிறகு, யூத தால்முட்டிலும் மற்ற பதிவுகளிலும் இதன் பெயர் அய்யார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. (1 இரா 6:37).

☞ சிறைபிடிக்கப்படுதல்:
தேசத்தைக் கைப்பற்றியவரின் கட்டளைப்படி சொந்த தேசத்திலிருந்தோ வீட்டிலிருந்தோ வெளியேற்றப்படுவது. “புறப்படுதல்” என்பதுதான் இதற்கான எபிரெய வார்த்தையின் அர்த்தம். இஸ்ரவேலர்கள் இரண்டு தடவை சிறைபிடிக்கப்பட்டுப் போனார்கள். பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் அசீரியர்களாலும், பிற்பாடு இரண்டு கோத்திர தெற்கு ராஜ்யத்தைச் சேர்ந்தவர்கள் பாபிலோனியர்களாலும் சிறைபிடிக்கப்பட்டார்கள். இந்த இரண்டு தொகுதியினரில் மீதி இருந்தவர்கள் பெர்சிய ராஜாவான கோரேசின் கட்டளைப்படி தங்கள் சொந்த தேசத்துக்கே திரும்ப அனுப்பப்பட்டார்கள். (2 இரா 17:6; 24:16; எஸ்றா 6:21).

செவ்வாய், 19 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ பதிவு இல. 12

(எரிகோ)


யோசுவா 6:10-15, 20 சொல்கிறபடி இஸ்ரவேல் படை வீரர்கள் எரிகோ நகரத்தை தினமும் ஒரு முறை 6 நாட்களுக்குச் சுற்றி வந்தார்கள். 7-வது நாள் 7 தடவை சுற்றி வந்தார்கள். பிறகு, எரிகோவின் பலமான சுவர்களை கடவுள் விழ வைத்தார்; உடனே, இஸ்ரவேலர்கள் எரிகோவைக் கைப்பற்றினார்கள். பைபிள் சொல்வதுபோல் ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது.

வேதாகம காலங்களில் எதிரிகள் ஒரு நகரத்தைக் கைப்பற்றுவதற்காக அதை முற்றுகை போடுவார்கள். அந்த நகரம் ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்பட்டிருந்தால் அங்கு இருக்கும் மக்கள் அவர்கள் சேமித்து வைத்த உணவைச் சாப்பிடுவார்கள். கடைசியில் எதிரிகள் அந்த நகரத்தைக் கைப்பற்றும்போது அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும், மீதியிருக்கும் உணவு உட்பட எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு போவார்கள். பாலஸ்தீனாவில் இருந்த நகரங்கள் இதுபோல் கைப்பற்றப்பட்டபோது அங்கிருந்த இடிபாடுகளில் கொஞ்சம் உணவு மட்டும் இருந்ததை அல்லது உணவே இல்லாமல் இருந்ததை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆனால், எரிகோவின் இடிபாடுகளில் அப்படி இல்லை. பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ இப்படிச் சொல்கிறது: ‘அந்த நகரம் அழிக்கப்பட்ட பிறகு அங்கு நிறைய மண்பாண்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதோடு, நிறைய தானியங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அந்தளவு அதிகமான தானியங்களைப் பார்ப்பது ரொம்ப அபூர்வம்!’

இஸ்ரவேலர்கள் எரிகோவிலிருந்து எதையும் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று கர்த்தர் கட்டளையிட்டிருந்ததால் அவர்கள் அங்கிருந்து எந்த உணவையும் எடுத்துக்கொண்டு வரவில்லை என்று வேதாகமம் சொல்கிறது. (யோசு. 6:17, 18) எரிகோவில் நிறைய தானியங்கள் இருந்த காலத்தில்தான், அதாவது அறுவடை காலத்துக்குப் பிறகு அந்த வருஷத்தின் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான், இஸ்ரவேலர்கள் எரிகோவைத் தாக்கினார்கள். (யோசு. 3:15-17; 5:10) எரிகோவைக் கைப்பற்றிய பிறகும் நிறைய தானியங்கள் இருந்தன. அதை வைத்துப் பார்க்கும்போது, வேதாகமம் சொல்கிறபடி ரொம்ப நாட்கள் முற்றுகை போடப்படாமல் எரிகோ நகரம் கைப்பற்றப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது!

வெள்ளி, 15 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ச



☞ சங்கீதம்:
கடவுளைப் புகழ்ந்து பாடும் பாட்டு. இசையோடு சேர்த்து மக்கள் இதைப் பாடினார்கள். எருசலேம் ஆலயத்தில் மக்கள் ஒன்றுகூடி கர்த்தரைத் தொழுதுக்கொண்டப் போது சங்கீதங்களைப் பாடினார்கள். (லூக் 20:43; அப் 13:33; யாக் 5:13).

☞ சடாமாஞ்சி எண்ணெய்:
இளஞ்சிவப்பு நிறமுள்ள விலை உயர்ந்த வாசனை எண்ணெய். சடாமாஞ்சி (நார்டோஸ்டாகிஸ் ஜட்டமான்ஸி) என்ற செடியிலிருந்து இது எடுக்கப்பட்டது. இது மிகவும் விலை உயர்ந்ததாக இருந்ததால், தரம் குறைந்த எண்ணெய்களோடு இது பெரும்பாலும் கலக்கப்பட்டது. சில சமயம், போலியான சடாமாஞ்சி எண்ணெய் விற்கப்பட்டது. ஆனால், இயேசுமீது ‘சுத்தமான சடாமாஞ்சி எண்ணெய்’ ஊற்றப்பட்டதென மாற்குவும் யோவானும் சொல்லியிருப்பது குறிப்பிடத்தக்கது. (மாற் 14:3; யோவா 12:3).

☞ சதுசேயர்கள்:
யூத மதத்தின் பிரபலமான பிரிவைச் சேர்ந்தவர்கள். ஆலய நடவடிக்கைகளைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த வசதியான உயர்குடி மக்களும் குருமார்களும் இந்தப் பிரிவில் இருந்தார்கள். பரிசேயர்களுடைய வாய்மொழி பாரம்பரியங்களையும் மற்ற நம்பிக்கைகளையும் இவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேவதூதர்கள், உயிர்த்தெழுதல் ஆகியவற்றையும் நம்பவில்லை. இயேசுவை இவர்கள் எதிர்த்தார்கள். (மத் 16:1; அப் 23:8).

☞ சந்திப்புக் கூடாரம்:
இது மோசேயின் கூடாரத்தையும், முதன்முதலாக வனாந்தரத்தில் அமைக்கப்பட்ட வழிபாட்டுக் கூடாரத்தையும் குறிக்கிறது. (யாத் 33:7; 39:32).

☞ சபிப்பது:
ஓர் ஆளுக்கோ பொருளுக்கோ கெட்டது நடக்கும் என்று அறிவிப்பது அல்லது மிரட்டுவது. அசிங்கமாக அல்லது ஆவேசமாகக் கத்துவதை இது அர்த்தப்படுத்தாது. பெரும்பாலும், கெட்டது நடக்கப்போவதைப் பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பாக அல்லது முன்னறிவிப்பாக இது இருக்கிறது. கடவுளோ அவரால் அங்கீகரிக்கப்பட்ட ஒருவரோ அதை அறிவிக்கும்போது, ஒரு தீர்க்கதரிசனத்துக்கு இருந்த மதிப்பையும் வலிமையையும் இது பெறுகிறது. (ஆதி 12:3; எண் 22:12; கலா 3:10).

☞ சபை:
ஒரு குறிப்பிட்ட நோக்கத்துக்காக அல்லது வேலைக்காக ஒன்றுகூடிய மக்கள் கூட்டம். எபிரெய வேதாகமத்தில், இது பொதுவாக இஸ்ரவேல் தேசத்தைக் குறிக்கிறது. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது கிறிஸ்தவர்களுடைய தனித்தனி சபைகளைக் குறிக்கிறது. ஆனால், பெரும்பாலும் ஒட்டுமொத்த கிறிஸ்தவ சபையைக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (1 இரா 8:22; அப் 9:31; ரோ 16:5).

☞ சமாதான பலி:
கர்த்தருடன் சமாதான உறவை விரும்பியவர்கள் செலுத்திய பலி. இந்தப் பலியைக் கொண்டுவந்தவரும் அவருடைய குடும்பத்தாரும், இந்தப் பலியைச் செலுத்திய குருவும், அந்தச் சமயத்தில் அங்கே சேவை செய்த மற்ற குருமார்களும் அதைச் சாப்பிட்டார்கள். எரிக்கப்பட்ட கொழுப்பிலிருந்து வந்த வாசனையை கர்த்தர் ஏற்றுக்கொண்டார். உயிருக்கு அடையாளமாக இருக்கிற இரத்தமும் கர்த்தருக்கே செலுத்தப்பட்டது. குருமார்களும் பலி செலுத்துபவர்களும் கர்த்தரோடு சேர்ந்து உணவு சாப்பிடுவதுபோல் இருந்தது. அவரோடு சமாதான உறவு இருப்பதை இது குறித்தது. (லேவி 7:29, 32; உபா 27:7).

☞ சமாரியர்கள்:
ஆரம்பத்தில், பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தைச் சேர்ந்த இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். கி.மு. 740-ல் அசீரியர்கள் சமாரியாவைக் கைப்பற்றிய பின்பு, அவர்களால் இங்கே கொண்டுவரப்பட்ட மற்ற தேசத்தாரும் சமாரியர்கள் என்று அழைக்கப்பட்டார்கள். இயேசுவின் காலத்தில், “சமாரியர்கள்” என்ற பெயர், ஓர் இனத்தையோ தேசத்தையோ சேர்ந்தவர்களைக் குறிப்பிட பயன்படுத்தப்படவில்லை. பண்டைய சீகேமுக்கும் சமாரியாவுக்கும் அருகில் வாழ்ந்த ஒரு மதப்பிரிவினரையே குறித்தது. இவர்களுடைய சில நம்பிக்கைகள், யூத மத நம்பிக்கைகளிலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தன. (யோவா 8:48).

☞ சமாரியா:
சுமார் 200 வருஷங்களுக்கு இஸ்ரவேல் தேசத்துடைய பத்துக் கோத்திர வடக்கு ராஜ்யத்தின் தலைநகரமாக இது இருந்தது. அதோடு, அந்த ராஜ்யத்துக்குட்பட்ட பகுதி முழுவதும்கூட சமாரியா என்று அழைக்கப்பட்டது. சமாரியா மலைமேல் இந்த நகரம் கட்டப்பட்டிருந்தது. இயேசுவின் காலத்தில், வடக்கே கலிலேயாவுக்கும் தெற்கே யூதேயாவுக்கும் இடையிலிருந்த ரோம மாகாணம் சமாரியா என்று அழைக்கப்பட்டது. இயேசு, சில சமயங்களில் சமாரியா வழியாகப் போனார், இந்த நகரத்தாரிடம் பேசினார். சமாரியர்களுக்குக் பரிசுத்த ஆவியானவர் கிடைத்தபோது, பேதுரு கடவுளுடைய ராஜ்யத்தின் இரண்டாவது சாவியை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தினார். (1 இரா 16:24; யோவா 4:7; அப் 8:14).

செவ்வாய், 12 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமமும் தொல்பொருள் ஆராய்ச்சியும் ~ பதிவு இல. 11

(புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட சீலோவாம் குளம்)



மண்ணைக் குழைத்து சேறுண்டாக்கி பார்வையற்ற ஒருவனுடைய கண்களில் இயேசு பூசினார். அதன்பின், “நீ போய், சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். அப்படியே அவன் போய்க் கழுவி, “பார்வையடைந்தவனாய்த் திரும்பிவந்தான்.” (யோவான் 9:6, 7) இந்தக் குளத்தைக் குறித்து சமீபத்திய புதைபொருள் ஆராய்ச்சியின்மூலம் புதிய தகவல் கிடைத்திருக்கிறது.

எருசலேம் நகரத்தில் சீலோவாம் குளம் என அழைக்கப்படுகிற ஒரு சுற்றுலாத் தலம் உள்ளது. அநேக சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்வையிட்டிருக்கிறார்கள். யோவான் 9:7-⁠ல் குறிப்பிடப்பட்டுள்ள குளம் இதுவே என அவர்கள் நினைக்கிறார்கள். கி.மு. எட்டாம் நூற்றாண்டில் எசேக்கியா ராஜாவால் கட்டப்பட்ட 530 மீட்டர் நீளமுள்ள தண்ணீர்ச் சுரங்கத்தின் கடைமுனையில் இது அமைந்துள்ளது. இந்தக் குளம் உண்மையில் கி.மு. நான்காம் நூற்றாண்டில்தான் கட்டப்பட்டது. இதைக் கட்டிய பைஸாண்டிய “கிறிஸ்தவர்கள்,” யோவான் சுவிசேஷத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சீலோவாம் குளம் இந்த இடத்தில்தான் இருந்திருக்குமெனத் தவறாக நினைத்துக்கொண்டார்கள்.

என்றாலும், புதைபொருள் ஆராய்ச்சியாளர்கள் 2004-⁠ல் ஒரு குளத்தைக் கண்டுபிடித்தார்கள். இதுவே இயேசு பூமியில் வாழ்ந்தபோது அமைந்திருந்த நிஜமான சீலோவாம் குளமாக இருந்திருக்குமென்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள். இந்தக் குளம், தற்போது சீலோவாம் குளம் எனத் தவறுதலாக அழைக்கப்படுகிற இடத்திற்குத் தென்கிழக்கே சுமார் 100 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் இருந்த கழிவுநீர்க் குழாயில் பழுதுபார்க்கும் பணி நடைபெற வேண்டியிருந்ததால் அரசு அதிகாரிகள் கனரக இயந்திரங்களுடன் பணியாட்களை அங்கே அனுப்பி வைத்தார்கள். தோண்டும் வேலை நடைபெற்றபோது, அதற்கு அருகே பணிபுரிந்த ஒரு புதைபொருள் ஆய்வாளர் அதைக் கவனித்துக்கொண்டே இருந்தார். அவருடைய கண்களில் இரண்டு படிக்கட்டுகள் தென்பட்டன. பழுதுபார்க்கும் பணி அத்தோடு நிறுத்தப்பட்டது. அந்தப் பகுதியில் அகழாய்வுப் பணியை மேற்கொள்ள இஸ்ரேல் நாட்டு புதைபொருள் ஆராய்ச்சித்துறை அனுமதி அளித்தது. சுமார் 70 மீட்டர் நீளமாய் இருந்த அந்தக் குளத்தின் ஒரு பக்கமும், அதன் இரு முனைகளும் இப்போது தோண்டப்பட்டுவிட்டன.

குளத்தைத் தோண்டியபோது சில நாணயங்களும் கிடைத்தன. இவை, ரோம அரசுக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்த இரண்டாம், மூன்றாம், நான்காம் ஆண்டுகளின்போது புழக்கத்தில் இருந்தவை. இந்தக் கலகம் கிறிஸ்து வருடம் 66-⁠க்கும் 70-⁠க்கும் இடைப்பட்ட காலத்தில் நடந்தது. கிறிஸ்து வருடம் 70-⁠ஆம் ஆண்டுவரை இந்தக் குளம் அப்பகுதியிலுள்ள மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்ததை அந்த நாணயங்கள் காட்டுகின்றன. அந்த வருடத்தில்தான் ரோமர்கள் எருசலேமைக் கைப்பற்றி அதைச் சிதைத்துச் சீரழித்திருந்தார்கள். பிப்ளிகல் ஆர்க்கியாலஜி ரிவ்யூ என்ற பத்திரிகை இவ்வாறு கருத்து தெரிவிக்கிறது: “ஆகவே, கலகம் ஓயும் வரையில் இந்தக் குளம் மக்களால் பயன்படுத்தப்பட்டது; அதன்பின்னர் உபயோகிக்காமல் அப்படியே விடப்பட்டது. பைஸாண்டிய ஆட்சிக்காலம் வரையில் யாரும் இங்கே மீண்டும் குடியேறவில்லை. எருசலேமிலேயே இந்தப் பகுதிதான் மிகத் தாழ்வான பகுதியாய் இருந்தது. ஒவ்வொரு வருடமும் குளிர் காலத்தில் பெய்த மழை காரணமாகப் பள்ளத்தாக்கின் வழியாகப் பாய்ந்தோடிய நீர், சேற்றையும் சகதியையும் இந்தக் குளத்தில் அடுக்கடுக்காய்ப் படிய வைத்தது. ரோமரால் எருசலேம் அழிக்கப்பட்டதால் இந்தக் குளம் தூர் வாரப்படாமல் பாழாய்க் கிடந்தது. இப்படிப் பல நூற்றாண்டுகளாக அடுக்கடுக்காய்ப் படிந்த சகதியால் இந்தக் குளம் ‘படிப்படியாய்’ மறைந்து இறுதியில் தடம்தெரியாமலே போய்விட்டது. அவ்வாறு படிந்திருந்த சகதியைத் தோண்டிய பிறகுதான், அதுவும் சில இடங்களில் கிட்டத்தட்ட 3 மீட்டர் ஆழத்திற்குத் தோண்டிய பிறகுதான் இந்தக் குளம் தட்டுப்பட்டது.”

சீலோவாம் குளத்தின் நிஜமான இருப்பிடத்தைக் கண்டறிந்தது வேதாகமத்தை படிப்பவர்களுக்கு, முதல் நூற்றாண்டிலிருந்த எருசலேம் நகரத்தின் நிலவியல் குறிப்புகள் இயேசுவின் வாழ்க்கையையும் ஊழியத்தையும் விவரிக்கும் சுவிசேஷப் பதிவுகளில் அடிக்கடி குறிப்பிடப்படுவதால் அதை நன்கு புரிந்துகொள்ள இது அவர்களுக்கு உதவுகிறது.

வெள்ளி, 8 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கொ, கோ



☞ கொம்பு:
இது மிருகங்களின் கொம்பைக் குறிக்கிறது. பானங்களை ஊற்றிக் குடிப்பதற்குப் பயன்படுத்தப்பட்டது. எண்ணெய், மை, அழகு சாதனப் பொருள்கள் ஆகியவற்றை வைப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. இசைக் கருவியாகவும் அறிவிப்பு செய்வதற்கான கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. (1சா 16:1, 13; 1 இரா 1:39; எசே 9:2) பலம், வெற்றி, கைப்பற்றுதல் ஆகியவற்றைக் குறிப்பதற்காக “கொம்பு” என்ற வார்த்தை பல தடவை பயன்படுத்தப்பட்டுள்ளது. (உபா 33:17; மீகா 4:13; சக 1:19).

☞ கொழுந்தன்முறை கல்யாணம்:
திருச்சட்டத்தில் பிற்பாடு சேர்த்துக்கொள்ளப்பட்ட வழக்கம். ஆண் குழந்தை இல்லாமல் இறந்துபோன ஒருவனுக்கு வாரிசு உண்டாக்குவதற்காக அவனுடைய மனைவியை அவனுடைய சகோதரன் கல்யாணம் செய்துகொள்ளும் வழக்கம். (ஆதி 38:8; உபா 25:5).

☞ கொள்ளைநோய்:
மிக வேகமாகப் பரவி மாபெரும் அளவில் மரணத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு தொற்றுநோயும் கொள்ளைநோய்தான். பெரும்பாலும், கடவுள் கொடுக்கிற தண்டனையோடு இது சம்பந்தப்படுத்தப்படுகிறது. (எண் 14:12; எசே 38:22, 23; ஆமோ 4:10).

☞ கோமேதகம்:
கருப்பு, பழுப்பு, சிவப்பு, சாம்பல், பச்சை நிறங்களில் கிடைக்கிற விலைமதிப்புள்ள கல். இவற்றில் இடையிடையே வெள்ளை வரிகள் இருக்கும். தலைமைக் குருவின் விசேஷ உடைகளில் இது பொருத்தப்பட்டிருந்தது. (யாத் 28:9, 12; 1 நாளா 29:2; யோபு 28:16).

☞ கோர்:
திடப்பொருள்களையும் திரவப்பொருள்களையும் அளக்கும் அளவை. இது 220 லிட்டருக்குச் சமம். இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (1 இரா 5:11).

வெள்ளி, 1 டிசம்பர், 2017

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ கூ - கை



☞ கூடாரப் பண்டிகை:
சேகரிப்புப் பண்டிகை என்றும் இது அழைக்கப்படுகிறது. இந்தப் பண்டிகை, ஏத்தானீம் மாதம் 15-ஆம் தேதியிலிருந்து 21-ஆம் தேதிவரை நடந்தது. இஸ்ரவேலர்களின் விவசாய வருடத்தின் முடிவில் அறுவடைக்குப் பிறகு இது கொண்டாடப்பட்டது. தங்களுடைய விளைச்சலை ஆசீர்வதித்ததற்காக கர்த்தருக்கு நன்றி சொல்லவும், சந்தோஷமாக இருக்கவும் இஸ்ரவேலர்கள் இதைக் கொண்டாடினார்கள். எகிப்திலிருந்து விடுதலையானதை நினைத்துப் பார்ப்பதற்காக, இந்தச் சமயத்தில் ஜனங்கள் கூடாரங்களில், அதாவது பந்தல்போட்ட இடங்களில், தங்கினார்கள். ஒவ்வொரு வருஷமும் ஆண்கள் எருசலேமுக்குப் போய்க் கொண்டாட வேண்டியிருந்த மூன்று பண்டிகைகளில் இதுவும் ஒன்று. (லேவி 23:34; எஸ்றா 3:4).

☞ கேப்:
1.22 லிட்டருக்குச் சமமான திட அளவை. இது பாத் அளவையின் அடிப்படையில் கணக்கிடப்பட்டது. (2இரா 6:25).

☞ கேமோஷ்:
மோவாபியர்களின் முக்கியத் தெய்வம். (1இரா 11:33).

☞ கேரா:
0.57 கிராமுக்குச் சமமான ஓர் எடை. ஒரு சேக்கலில், 20-ல் ஒரு பங்கு. (லேவி 27:25)

☞ கேருபீன்கள்:
விசேஷப் பொறுப்புகளைப் பெற்று, உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கிற தேவதூதர்கள். சேராபீன்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. (ஆதி 3:24; யாத் 25:20; ஏசா 37:16; எபி 9:5).

☞ கைகளை வைத்தல்:
ஒருவரை விசேஷமான வேலைக்கு நியமிக்கும்போது அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. அதோடு, ஒருவரை ஆசீர்வதிக்கவும் குணப்படுத்தவும் கடவுளுடைய சக்தியின் வரத்தைக் கொடுக்கவும் அவர்மீது கைகள் வைக்கப்பட்டன. சில சமயங்களில், மிருகங்களைப் பலி கொடுப்பதற்கு முன்பு அவற்றின் மீது கைகள் வைக்கப்பட்டன. (யாத் 29:15; எண் 27:18; அப் 19:6; 1தீ 5:22).