ஞாயிறு, 25 மார்ச், 2018

யாருக்காக காத்துக்கிடக்கின்றது, இந்த கிழக்கு வாசல்?




இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக நாம் காத்திருக்கின்றோமோ இல்லையோ, ஆனால் இந்த கிழக்கு வாசல் ரொம்ப நாட்களாக காத்து கிடக்கிற கதை தெரியுமோ உங்களுக்கு?

இந்த வாசல் வழியாகத் தான் யூதருக்கு ராஜாவாக அந்த முதல் குருத்தோலை திருநாளில் கடைசியாக எருசலேமுக்குள் இயேசு கிறிஸ்து நுழைந்தார். இப்போது மீண்டும் அவர் மட்டுமே இந்த வாசல் வழியாக ராஜாவாக நுழையவேண்டும் என்பதற்காக இந்த வாசல் இன்னும் பூட்டப்பட்டிருக்கிறது ஒரு அதிசயகரமான சம்பவம். அதை பூட்டி வைத்தது ஒரு முகமதிய மன்னனான சுல்தான் சுலைமான் மன்னன்.

வேதம் சொல்லுகிறது "இந்த வாசல் திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருக்கும்; ஒருவரும் இதற்குள் பிரவேசிப்பதில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் இதற்குள் பிரவேசித்தார், ஆகையால் இது பூட்டப் பட்டிருக்கவேண்டும்.”(எசேக்கியேல்:44:2).

அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே எசேக்கியேல் தீர்க்கதரிசி இங்கே ஓசன்னா திருநாளை முன்னுரைத்தான்.
கிறிஸ்துவுக்கு பின் 1543-ல் எகிப்தையும் சிரியாவையும் ஆண்ட சுல்தான் சுலைமான் ஒரு காரணமும் இல்லாமல் இவ்வாசலைக் கற்களால் கட்டி அடைத்தான் என்கிறார்கள். இன்றும் இது மூடப்பட்டிருக்கிறது. “ஒரு கிறிஸ்தவ அரசன் இவ்வழியாய் நுழைந்து எருசலேமைப்பிடித்து அப்புறம் தன் எதிரிகளையெல்லாம் ஜெயித்துவிடுவான்” என்கின்ற பாரம்பரியப் பேச்சு ஒன்று முகமதியருக்குள் வெகுவாக பரவி இருந்தது. அந்நிகழ்வை தடைசெய்ய இவ்வாறு அவன் செய்து இருக்கலாம் என்கிறார்கள். ஆனால் சுல்தான் சுலைமானோ அவனை அறியாமலே வேதவாக்கியத்தை நிறைவேற்றியிருக்கிறான்.

அப்புறம் எப்போது தான் இந்த வாசல் திறக்கப்படும்?
மூன்றாவது வசனத்தை கவனியுங்கள். "இது அதிபதிக்கே உரியது, அதிபதி கர்த்தருடைய சந்நிதியில் போஜனம்பண்ணும்படி இதில் உட்காருவான்; அவன் வாசல் மண்டபத்தின் வழியாய்ப் பிரவேசித்து, மறுபடியும் அதின் வழியாய்ப் புறப்படுவான்.”(எசேக்கியேல்:44:3).
கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இந்த இரண்டாவது வாக்கியம் நிறைவேறும். ஆமேன்.
வாசல்களே, உங்கள் தலைகளை உயர்த்துங்கள்; அநாதி கதவுகளே, உயருங்கள்; மகிமையின் ராஜா உட்பிரவேசிப்பார். யார் இந்த மகிமையின்ராஜா? அவர் சேனைகளின் கர்த்தரானவர்; அவரே மகிமையின் ராஜா. (சங்கீதம் 24:9,10).

வியாழன், 22 மார்ச், 2018

EL- OLAM - நித்யத்திற்க்கும் தேவன்




EL- OLAM - நித்யத்திற்க்கும் தேவன் (EL o-lawm')

☞ இந்த வார்த்தை முதன் முதலில் ஆதி 21: 33 ல் உரைக்கப்படுகிறது. 
எரேமியா 10:10; ஏசாயா 26: 4 லிலும் உள்ளது. 

☞ ஆபிரகாம் பெயர்செபாவிலே ஒரு தோப்பை உண்டாக்கி, சதாகாலமுமுள்ள தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை அவ்விடத்தில் தொழுதுகொண்டான். (ஆதியாகமம் 21: 33)

☞ ஏசாயா 26:4 கர்த்தரை என்றென்றைக்கும் நம்புங்கள்; கர்த்தராகிய யேகோவா நித்திய கன்மலையாயிருக்கிறார். 

☞ EL என்றால் தேவனை குறிக்கும் சொல். அதோடு சேர்த்து வருகிற சொல் தேவனுடைய குணம்- பண்புகள் பற்றி குறிக்கும்.

☞ Olam என்றால் எக்காலத்திற்க்கும் உள்ள என பொருள்படும்.

☞ El- olam என்றால் 
"நித்யத்திற்க்கும் தேவன்"
நித்யானந்தா என்பது பொருத்தமாக இருக்கும்.

☞ 1 திமோ 1: 11 ல், நித்தியானந்த தேவனுடைய மகிமையான சுவிசேஷத்தின்படி எனக்கு ஒப்புவிக்கப்பட்டிருக்கிற ஆரோக்கியமான உபதேசத்திற்கு எதிரிடையாயிருக்கிற மற்றெந்தச் செய்கைக்கும் விரோதமாய் விதிக்கப்பட்டிருக்கிறது.

☞ 1 தீமோத்தேயு 6:15- 16 அந்தப் பிரசன்னமாகுதலை தேவன் தம்முடைய காலங்களில் வெளிப்படுத்துவார், அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தாவும்,

☞ ஒருவராய், சாவாமையுள்ளவரும், சேரக்கூடாத ஒளியில் வாசம்பண்ணுகிறவரும், மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும், காணக்கூடாதவருமாயிருக்கிறவர்; அவருக்கே கனமும் நித்திய வல்லமையும் உண்டாயிருப்பதாக. ஆமென்.

நன்றி நண்பறே...

புதன், 28 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ ந, நா




☞ நசரேயர்:
‘தேர்ந்தெடுக்கப்பட்டவர்,’ ‘அர்ப்பணிக்கப்பட்டவர்,” ‘பிரித்து வைக்கப்பட்டவர்’ என்ற அர்த்தத்தைத் தரும் எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்தது. நசரேயர்களில் இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒரு பிரிவினர், நசரேயராக இருக்க தாங்களாகவே முன்வந்தவர்கள்; மற்றொரு பிரிவினர், கடவுளால் நியமிக்கப்பட்டவர்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு நசரேயராக இருக்க விரும்புவதாக ஓர் ஆணோ பெண்ணோ கர்த்தரிடம் நேர்ந்துகொள்ளலாம். தாங்களாகவே முன்வந்து நேர்ந்துகொள்பவர்களுக்கு மூன்று முக்கியமான கட்டுப்பாடுகள் இருந்தன:

(1) மது குடிக்கக் கூடாது, திராட்சைக் கொடியிலிருந்து கிடைக்கிற எதையும் சாப்பிடக் கூடாது.

(2) தலைமுடியை வெட்டக் கூடாது.

(3) பிணத்தைத் தொடக் கூடாது.

கடவுளால் நியமிக்கப்பட்ட நசரேயர்கள், வாழ்நாள் முழுவதும் நசரேயர்களாகவே இருந்தார்கள்; அவர்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்பதை கர்த்தரே அவர்களுக்குச் சொல்லியிருந்தார். (எண் 6:2-7; நியா 13:5).

☞ நடுவர்கள்:
பாபிலோனிய அரசாங்கத்தின் ஆட்சி எல்லைக்கு உட்பட்ட மாகாணங்களில் இருந்த காவல்துறை நடுவர்கள், படைத்துறை சாராத ஊழியர்களாக இருந்தார்கள். இவர்களுக்குச் சட்டம் தெரிந்திருந்தது, தீர்ப்பளிக்கும் அதிகாரமும் ஓரளவு இருந்தது. ரோமக் குடியேற்றப் பகுதிகளில் இருந்த அரசு நடுவர்கள் அரசு நிர்வாகிகளாக இருந்தார்கள். சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுவது, நிதி நிலைமையைக் கட்டுப்படுத்துவது, குற்றவாளிகளுக்குத் தீர்ப்பு கொடுப்பது, தண்டனையை நிறைவேற்ற கட்டளை கொடுப்பது போன்றவை இவர்களுடைய வேலையாக இருந்தது. (தானி 3:2; அப் 16:20).

☞ நற்செய்தி:
கடவுளுடைய ராஜ்யத்தைப் பற்றிய செய்தியும், இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பதால் கிடைக்கிற மீட்பைப் பற்றிய செய்தியும், நற்செய்தி என்று கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் சொல்லப்படுகிறது. (லூக் 4:18, 43; அப் 5:42; வெளி 14:6).

☞ நன்மை தீமை அறிவதற்கான மரம்:
ஏதேன் தோட்டத்தில் இருந்த ஒரு மரம். எது “நன்மை,” எது “தீமை” என்பதைத் தீர்மானிக்கிற உரிமை கடவுளுக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை இது அடையாளப்படுத்தியது. (ஆதி 2:9,17).

☞ நன்றிப் பலிகள்:
கடவுள் கொடுத்த எல்லாவற்றுக்காகவும், அவருடைய மாறாத அன்புக்காகவும் அவரைப் புகழ்வதற்காகக் கொடுக்கப்பட்ட சமாதான பலி. மிருக பலியின் இறைச்சியும், புளிப்பான மற்றும் புளிப்பில்லாத ரொட்டியும் சாப்பிடப்பட்டன. இறைச்சியை அதே நாளில் சாப்பிட வேண்டியிருந்தது. (2 நாளா. 29:31).

☞ நாசரேத்தூரார்:
நாசரேத் என்ற ஊரைச் சேர்ந்தவராக இருந்ததால் இயேசுவுக்கு இந்தப் பெயர் கொடுக்கப்பட்டது. ஏசாயா 11:1-ல், “தளிர்” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள எபிரெய வார்த்தையோடு இது சம்பந்தப்பட்டிருக்கலாம். பிற்பாடு, இயேசுவின் சீஷர்களைக் குறிப்பிடும்போதும் இந்தப் பெயர் பயன்படுத்தப்பட்டது. (மத் 2:23; அப் 24:5).

☞ நாரிழைத் துணி; நாரிழை உடை:
ஆளிவிதைச் செடியின் நாரிலிருந்து தயாரிக்கப்பட்ட விலை உயர்ந்த துணி அல்லது உடை. இது லினன் என்றும் அழைக்கப்படுகிறது.

வெள்ளி, 23 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தொ, தோ



☞ தொழுநோய்; தொழுநோயாளி:
இது பயங்கரமான தோல் நோய். இன்று தொழுநோய் என்று அழைக்கப்படுகிற நோயை மட்டுமே இது குறிப்பதில்லை. ஏனென்றால், வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள தொழுநோய் மனிதர்களை மட்டுமல்லாமல் உடைகளையும் வீடுகளையும்கூட பாதித்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் தொழுநோயாளி என்று அழைக்கப்படுகிறார். (லேவி 14:54; லூக் 5:12).

☞ தொழுமரம்:
சித்திரவதை செய்வதற்காகவும் தண்டனை கொடுப்பதற்காகவும் பயன்படுத்தப்பட்ட கருவி. சில கருவிகளில், கால்கள் மட்டுமே மாட்டி வைக்கப்பட்டன. மற்ற கருவிகளில், கால்கள், கைகள், கழுத்து ஆகியவையும் மாட்டி வைக்கப்பட்டன. (எரே 20:2; அப் 16:24).

☞ தோல் சுருள்:
செம்மறியாடு, வெள்ளாடு மற்றும் கன்றுக்குட்டியின் தோலால் செய்யப்பட்ட பொருள்; இது எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. பாப்பிரஸ் புல் சுருள்களைவிட நீடித்து உழைத்தது. அதனால் பரிசுத்த வேதாகமம் எழுதுவதற்கு இது பயன்படுத்தப்பட்டது. பவுல் தீமோத்தேயுவிடம் கொண்டுவரச் சொன்ன தோல் சுருள்கள், அநேகமாக எபிரெய வேதாகமத்தின் சில பாகங்களாக இருந்திருக்கலாம். சவக்கடல் சுருள்களின் சில பாகங்கள் தோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்தன. (2 தீமொ. 4:13).

☞ தோல் பை:
திராட்சமதுவை நிரப்பி வைப்பதற்காக, வெள்ளாடு, செம்மறியாடு போன்ற விலங்குகளின் முழு தோலால் செய்யப்பட்ட பை. திராட்சமது புளிக்கும்போது, அதிலிருந்து கரியமில வாயு (கார்பன்-டை-ஆக்ஸைடு) உருவாவதால், தோல் பைகளில் அழுத்தம் ஏற்படும். அதனால், புதிய தோல் பைகளில்தான் திராட்சமது நிரப்பப்பட்டது. புதிய தோல் பைகள் விரிவடைந்தன; ஆனால், பழைய தோல் பைகள் அழுத்தம் தாங்க முடியாமல் வெடித்தன. (யோசு 9:4; மத் 9:17).

வெள்ளி, 9 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தெ, தே




☞ தெக்கப்போலி:
பல கிரேக்க நகரங்கள் அடங்கிய பகுதி; ஆரம்பத்தில், பத்து நகரங்கள் இதில் இருந்தன. (தெக்கா என்ற கிரேக்க வார்த்தைக்கு “பத்து” என்றும், போலிஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “நகரம்” என்றும் அர்த்தம்.) இந்த நகரங்களில் பெரும்பாலானவை யோர்தான் ஆறு மற்றும் கலிலேயா கடலின் கிழக்குப் பகுதியில் இருந்தன. இந்தப் பகுதியும் தெக்கப்போலி என்று அழைக்கப்பட்டது. இந்த நகரங்கள், கிரேக்க கலாச்சார மையமாகவும் வர்த்தக மையமாகவும் இருந்தன. இயேசு இந்தப் பகுதி வழியாகப் பயணம் செய்தார். ஆனால், இந்த நகரங்களுக்குள் போனதாக எந்தப் பதிவும் இல்லை. (மத் 4:25; மாற் 5:20).

☞ தேபேத்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 10-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 4-ஆம் மாதம். இது டிசம்பர் பாதியில் ஆரம்பித்து ஜனவரி பாதியில் முடிவடைந்தது. பொதுவாக, ‘பத்தாம் மாதம்’ என அழைக்கப்படுகிறது. (எஸ்தர் 2:16).

☞ தேவதூதர்கள்:
இதற்கான எபிரெய வார்த்தை மாலக்; கிரேக்க வார்த்தை ஆகிலோஸ். இந்த இரண்டு வார்த்தைகளுக்கும் “தூதுவர்” என்று அர்த்தம். பரலோகத் தூதுவர்களைப் பற்றிச் சொல்லும்போது, “தூதர்கள்,” ‘தேவதூதர்கள்’ என்று இவை மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. (ஆதி 16:7; 32:3, யாக் 2:25; வெளி 22:8) மனிதர்களைப் படைப்பதற்குப் பல காலத்துக்கு முன்பே கடவுள் இந்தத் தேவதூதர்களைப் படைத்தார். இவர்களுக்கு அபார பலம் இருக்கிறது. இவர்களை “பரிசுத்த தூதர்கள்,” “கடவுளின் மகன்கள்,” “விடியற்கால நட்சத்திரங்கள்” என்று பரிசுத்த வேதாகமம் குறிப்பிடுகிறது. (உபா 33:2; யோபு 1:6, 38:7) இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இவர்கள் படைக்கப்படவில்லை, தனித்தனி நபர்களாகப் படைக்கப்பட்டார்கள். இவர்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். (தானி 7:10) ஒவ்வொரு தேவதூதருக்கும் ஒரு பெயர் இருப்பதாகவும், தனித்தன்மை இருப்பதாகவும் வேதாகமம் சுட்டிக்காட்டுகிறது; அப்படியிருந்தும், மனிதர்களிடமிருந்து வணக்கத்தைப் பெற மறுத்து மனத்தாழ்மையைக் காட்டியிருக்கிறார்கள். பெரும்பாலான தேவதூதர்கள் தங்களுடைய பெயரைக்கூட சொன்னதில்லை. (ஆதி 32:29; லூ 1:26; வெளி 22:8, 9) அவர்களுக்கு வித்தியாசமான ஸ்தானங்களும் பொறுப்புகளும் இருக்கின்றன. கர்த்தரின் சிம்மாசனத்துக்கு முன்னால் சேவை செய்வது, அவருடைய செய்திகளை மற்றவர்களுக்குச் சொல்வது, பூமியிலுள்ள அவருடைய ஊழியர்களுக்கு உதவி செய்வது, அவருடைய நியாயத்தீர்ப்புகளை நிறைவேற்றுவது, பிரசங்க வேலையை ஆதரிப்பது என நிறைய பொறுப்புகள் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. (2 இரா 19:35; சங் 34:7; லூக் 1:30, 31; வெளி 5:11; 14:6) எதிர்காலத்தில் நடக்கப்போகும் அர்மகெதோன் போரில் இவர்கள் இயேசுவோடு சேர்ந்து போரிடுவார்கள். (வெளி 19:14, 15).

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தீ-தூ



☞ தீட்டு:
உடல் அசுத்தமாக இருப்பதையோ ஒழுக்கச் சட்டங்களை மீறுவதையோ இது அர்த்தப்படுத்தலாம். திருச்சட்டத்தின்படி ஏற்றுக்கொள்ள முடியாத அசுத்தமான விஷயங்களைக் குறிப்பிட தீட்டு என்ற வார்த்தை வேதாகமத்தில் பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. (லேவி 5:2; 13:45; அப் 10:14; எபே 5:5).

☞ தீர்க்கதரிசனம்:
கடவுளிடமிருந்து வருகிற செய்தி. அவருடைய தீர்மானத்தை வெளிப்படுத்துவதற்காக அல்லது அறிவிப்பதற்காகக் கொடுக்கப்பட்ட செய்தி. இது கடவுளால் கொடுக்கப்பட்ட ஒழுக்க சம்பந்தமான போதனையாகவோ, கடவுளுடைய கட்டளையை அல்லது தீர்ப்பைப் பற்றிய அறிவிப்பாகவோ, எதிர்காலத்தில் நடக்கப்போவதைப் பற்றிய அறிவிப்பாகவோ இருக்கலாம். (எசே 37:9, 10; தானி 9:24; மத் 13:14; 2 பேது 1:20, 21).

☞ தீர்க்கதரிசி:
கடவுளுடைய நோக்கங்களைத் தெரியப்படுத்த அவரால் பயன்படுத்தப்பட்ட நபர். தீர்க்கதரிசிகள் கடவுளின் சார்பாக மக்களிடம் பேசினார்கள். எதிர்காலத்தில் நடக்கவிருந்த விஷயங்களை மட்டுமல்ல, கர்த்தருடைய போதனைகளையும் கட்டளைகளையும் தீர்ப்புகளையும்கூட அறிவித்தார்கள். (ஆமோ 3:7; 2 பேது 1:21).

☞ துக்கத் துணி:
சாக்கு அல்லது பை செய்வதற்குப் பயன்படுத்தப்பட்ட சொரசொரப்பான துணி; இதில் தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டன. பெரும்பாலும், இவை கருப்பு நிற ஆடுகளின் ரோமத்திலிருந்து தயாரிக்கப்பட்டன. பொதுவாக, துக்கம் அனுசரிக்கிற சமயத்தில் மக்கள் இதைப் போட்டுக்கொண்டார்கள். (ஆதி 37:34; லூக் 10:13).

☞ துக்கம் அனுசரிப்பது:
யாராவது இறந்துவிட்டாலோ, துயரமான சம்பவம் நடந்துவிட்டாலோ அந்தத் துக்கத்தை வெளிப்படையாகக் காட்டுவது. பைபிள் காலங்களில், குறிப்பிட்ட நாட்கள்வரை துக்கம் அனுசரிப்பது வழக்கமாக இருந்தது. துக்கம் அனுசரிப்பவர்கள் சத்தமாக அழுவது மட்டுமல்லாமல், இதற்கென்றே இருக்கிற உடைகளை அணிந்துகொள்வார்கள், சாம்பலைத் தலையில் போட்டுக்கொள்வார்கள், உடைகளைக் கிழித்துக்கொள்வார்கள், நெஞ்சில் அடித்துக்கொள்வார்கள். கூலிக்காகத் துக்கம் அனுசரிப்பவர்கள் சில சமயம் சவ அடக்க நிகழ்ச்சியின்போது அழைக்கப்பட்டார்கள். (ஆதி 23:2; எஸ்தர் 4:3; வெளி 21:4).

☞ தூண்:
முக்கியமான விஷயங்களின் அல்லது சம்பவங்களின் நினைவாக இவை வைக்கப்பட்டன. சாலொமோன் கட்டிய ஆலயத்திலும், அவர் கட்டிய மற்ற மாளிகைகளிலும் மண்டபங்களிலும் இவை இருந்தன. பொய் தெய்வங்களை வணங்கிய ஜனங்கள் தங்களுடைய தெய்வங்களுக்காகப் பூஜைத் தூண்களை வைத்தார்கள். சில சமயங்களில், இஸ்ரவேலர்களும் இவர்களைப் போலவே செய்தார்கள். (நியா 16:29; 1ரா 7:21; 14:23).

☞ தூபப்பொருள்:
நறுமணப் பிசின்களும் வாசனை எண்ணெய்களும் சேர்ந்த கலவை. இது மெதுவாக எரிந்து, வாசனையான புகையைத் தரும். வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்துவதற்காக நான்கு பொருள்கள் கலந்த விசேஷ தூபப்பொருள் தயாரிக்கப்பட்டது. பரிசுத்த அறையில் இருந்த தூபபீடத்தில் காலையிலும் மாலையிலும் இது எரிக்கப்பட்டது. பாவப் பரிகார நாளன்று மகா பரிசுத்த அறையில் இது எரிக்கப்பட்டது. கடவுள் ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் செய்யும் ஜெபங்களுக்கு இது அடையாளமாக இருந்தது. கிறிஸ்தவர்கள் இதைப் பயன்படுத்தும்படி எதிர்பார்க்கப்படவில்லை. (யாத் 30:34, 35; லேவி 16:13; வெளி 5:8).

செவ்வாய், 30 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தி



☞ திராக்மா:
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில், இது 3.4 கிராம் எடையுள்ள கிரேக்க வெள்ளிக் காசைக் குறிக்கிறது. எபிரெய வேதாகமத்தில், பெர்சியர்களின் காலப்பகுதியைச் சேர்ந்த தங்க திராக்மாவைப் பற்றிச் சொல்லப்பட்டுள்ளது; இந்த திராக்மா, தாரிக் காசு என்று கருதப்படுகிறது. (நெகே 7:70, மத் 17:24).

☞ திராட்சமது காணிக்கை:
பலிபீடத்தின்மீது காணிக்கையாக ஊற்றப்பட்ட திராட்சமது. பெரும்பாலான மற்ற பலிகளோடு சேர்த்து இது கொடுக்கப்பட்டது. சக கிறிஸ்தவர்களுக்காகத் தன்னையே தியாகம் செய்யத் தயாராய் இருப்பதைத் தெரியப்படுத்த பவுல் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தினார். (எண் 15:5, 7; பிலி 2:17).

☞ திராட்சரச ஆலை:
பொதுவாக, சுண்ணாம்புக் கல்லில் வெட்டப்பட்ட இரண்டு தொட்டிகளைக் குறிக்கிறது. ஒரு தொட்டி இன்னொன்றைவிட உயரத்தில் இருந்தது. இவை இரண்டும் ஒரு சிறிய கால்வாய் மூலம் இணைக்கப்பட்டிருந்தன. மேலே இருந்த தொட்டியில் திராட்சைப் பழங்கள் மிதிக்கப்பட்டபோது, கீழே இருந்த தொட்டியில் திராட்சரசம் நிரம்பியது. கடவுளின் நியாயத்தீர்ப்புக்கு அடையாளமாக இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. (ஏசா 5:2; வெளி 19:15).

☞ திரி வெட்டும் கருவிகள்:
இந்தக் கருவிகள் வழிபாட்டுக் கூடாரத்திலும் ஆலயத்திலும் பயன்படுத்தப்பட்டன. இவை தங்கம் அல்லது செம்பால் செய்யப்பட்டிருந்தன. விளக்குத் திரிகளை வெட்டுவதற்கான இந்தக் கருவிகள் பார்ப்பதற்குக் கத்தரிக்கோல் போல இருந்திருக்கலாம். (2 இரா 25:14).

☞ திரிகைக் கல்:
ஒரு வட்ட வடிவ கல்மீது வைக்கப்பட்ட இன்னொரு வட்ட வடிவ கல்; தானியங்களை அரைக்க இது பயன்படுத்தப்பட்டது. மேற்கல்லை சுழற்றுவதற்காக, அடிக்கல்லின் நடுவில் ஒரு முளை பொருத்தப்பட்டிருந்தது. பைபிள் காலங்களில், கையினால் சுற்றப்பட்ட திரிகைக் கல் பெரும்பாலான வீடுகளில் இருந்தது, பெண்கள் இதைப் பயன்படுத்தினார்கள். அன்றாட உணவான ரொட்டியைத் தயாரிக்க இது கட்டாயம் தேவைப்பட்டதால், திரிகையின் அடிக்கல்லையோ அதன் மேற்கல்லையோ யாரும் அடமானமாக வாங்கக் கூடாது என்ற கட்டளை திருச்சட்டத்தில் இருந்தது. பெரிய திரிகைக் கல் விலங்குகளை வைத்து இயக்கப்பட்டது. (உபா 24:6, மாற் 9:42).

☞ திருச்சட்டம்:
கி.மு. 1513-ல் இஸ்ரவேலர்கள் சீனாய் வனாந்தரத்தில் இருந்தபோது மோசே மூலமாக கர்த்தர் அவர்களுக்குக் கொடுத்த முழு சட்டத் தொகுப்பை அல்லது பைபிளின் முதல் 5 புத்தகங்களைக் குறிக்கிறது. (யோசு 23:6; லூ 24:44; மத் 7:12; கலா 3:24) சில சமயங்களில், ‘சட்டம்’ என்று மட்டுமே குறிப்பிடப்படுகிற வசனங்களில், அது திருச்சட்டத்திலுள்ள ஒரு தனி சட்டத்தை அல்லது ஒரு சட்டத்திலுள்ள நியமத்தை அர்த்தப்படுத்தலாம். (எண் 15:16; உபா 4:8).

☞ திரைச்சீலை:
வழிபாட்டுக் கூடாரத்திலும் சரி, ஆலயத்திலும் சரி, பரிசுத்த அறைக்கும் மகா பரிசுத்த அறைக்கும் நடுவில் போடப்பட்டிருந்த துணி; இது அழகாக நெய்யப்பட்டிருந்தது; இதில் கேருபீன் வடிவத்தில் தையல் வேலைப்பாடு செய்யப்பட்டிருந்தது. (யாத் 26:31; 2 நாளா 3:14; மத் 27:51; எபி 9:3).

☞ தினாரியு:
சுமார் 3.85 கிராம் எடையுள்ள ரோம வெள்ளிக் காசு. இதன் ஒரு பக்கத்தில் ரோம அரசனுடைய உருவம் இருந்தது. இது ஒரு கூலியாளின் தினக் கூலியாக இருந்தது. யூதர்களிடமிருந்து ‘தலைவரியாக’ ரோமர்களால் வசூலிக்கப்பட்டது. (மத் 22:17, லூக் 20:24).

☞ திஷ்ரி/ஏத்தானீம்:
யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 7-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி முதல் மாதம். இது செப்டம்பர் பாதியில் ஆரம்பித்து அக்டோபர் பாதியில் முடிவடைந்தது. யூதர்கள் பாபிலோனிலிருந்து திரும்பி வந்த பிறகு, இது திஷ்ரி என்று அழைக்கப்பட்டது. (1 இரா 8:2).

வெள்ளி, 26 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ தா



☞ தாகோன்:
பெலிஸ்தியர்களின் தெய்வம். இந்த வார்த்தை எப்படி வந்தது என்று சரியாகத் தெரியவில்லை. ஆனால், தக் (மீன்) என்ற எபிரெய வார்த்தையிலிருந்து இது வந்திருக்கலாம் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். (நியா 16:23; 1 சாமு 5:4).

☞ தார்க்கோல்:
கூர்மையான உலோக முனையைக் கொண்ட நீளமான தடி. விலங்குகளை ஓட்ட விவசாயிகள் இதைப் பயன்படுத்தினார்கள். ஞானமுள்ளவரின் வார்த்தைகள், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுவதால் அவை தார்க்கோலுக்கு ஒப்பிடப்படுகின்றன. அடங்காத ஒரு காளையைத் தார்க்கோலால் குத்தினாலும், அது பணிந்துபோகாமல் தார்க்கோலை உதைத்து உதைத்து தன்னையே காயப்படுத்திக்கொள்ளும். இதை வைத்துதான் “தார்க்கோலை உதைத்துக்கொண்டே இருப்பது” என்ற சொற்றொடர் வந்தது. (அப் 26:14; நியா 3:31).

☞ தாரிக்:
8.4 கிராம் எடையுள்ள பெர்சிய தங்கக் காசு. (1 நாளா 29:7).

☞ தாலந்து:
எபிரெயர்கள் பயன்படுத்திய மிகப்பெரிய எடை; இது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. இதன் எடை 34.2 கிலோ. கிரேக்க தாலந்தின் எடை இதைவிட குறைவாக இருந்தது. அதன் எடை 20.4 கிலோ. (1 நாளா 22:14; மத் 18:24).

☞ தாவீதின் நகரம்:
தாவீது எபூசு நகரத்தைக் கைப்பற்றி, தன்னுடைய அரண்மனையைக் கட்டிய பிறகு, அந்த நகரத்துக்குக் கொடுக்கப்பட்ட பெயர். இது சீயோன் என்றும் அழைக்கப்படுகிறது. இது எருசலேமின் தென்கிழக்குப் பகுதி, அதன் மிகப் பழமையான இடம். (2 சாமு 5:7; 1 நாளா 11:4, 5).

☞ தாவீதின் குமாரன்:
இயேசுவைக் குறிப்பிட இந்த வார்த்தைகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டன. தாவீதின் வம்சத்தில் வருகிற ஒருவரால்தான் கடவுளின் ராஜ்ய ஒப்பந்தம் நிறைவேற வேண்டியிருந்தது; அந்த வாரிசு இயேசுதான் என்பதைக் காட்டுவதற்கு இந்த வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன. (மத். 12:23; 21:9).

☞ தானதர்மம்:
கஷ்டப்படுகிறவர்களுக்கு உதவி செய்வதற்காகக் கொடுக்கப்படுகிற தானம். இதைப் பற்றி எபிரெய வேதாகமத்தில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஆனால், ஏழைகளுக்கு உதவி செய்ய வேண்டிய கடமையைப் பற்றி இஸ்ரவேலர்களுக்குத் திருச்சட்டத்தில் திட்டவட்டமான கட்டளைகள் இருந்தன. (மத் 6:2).

வெள்ளி, 12 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ த



☞ தகன பலி:
கடவுளுக்கு முழுமையான காணிக்கையாகப் பலிபீடத்தின்மீது எரிக்கப்பட்ட மிருக பலி. காளை, ஆடு, வெள்ளாடு, புறா, புறாக்குஞ்சு ஆகியவற்றைத் தகன பலியாகக் கொடுத்தவர் அவற்றின் எந்தப் பாகத்தையும் தனக்காக எடுத்துக்கொள்ளவில்லை. (யாத் 29:18; லேவி 6:9).

☞ தத்துவ ஞானிகளான எப்பிக்கூரர்கள்:
இவர்கள் கிரேக்க தத்துவ ஞானியான எப்பிக்கூரசை (கி.மு. 341-270) பின்பற்றியவர்கள். இன்பம்தான் வாழ்க்கையின் லட்சியம் என்ற கருத்து இவர்களுடைய தத்துவத்துக்கு அடிப்படையாக இருந்தது. (அப் 17:18).

☞ தத்துவ ஞானிகளான ஸ்தோயிக்கர்கள்:
கிரேக்க தத்துவ ஞானிகளில் ஒரு பிரிவினர். பகுத்தறிவோடு நடந்துகொள்ளும்போதும், இயற்கையோடு ஒன்றி வாழும்போதும் சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பினார்கள். இன்ப துன்பத்தால் பாதிக்கப்படாத நபர்தான் உண்மையான ஞானி என்றும் நம்பினார்கள். (அப் 17:18).

☞ தம்மூஸ்(1):
எருசலேமில் இருந்த விசுவாசதுரோக எபிரெயப் பெண்கள் இந்தத் தெய்வத்துக்காக அழுதார்கள். தம்மூஸ் என்பது உண்மையில் ஒரு ராஜா என்றும், அவன் இறந்ததுக்குப் பின்பு தெய்வமாக வணங்கப்பட்டான் என்றும் சொல்லப்படுகிறது. சுமேரிய எழுத்துக்களில், தம்மூஸ் என்பது டுமுசீ என்று அழைக்கப்படுகிறது. இது, கருவள தெய்வமான இனென்னாவின் (பாபிலோனிய இஷ்டாரின்) காதலன் அல்லது துணை என்று சொல்லப்படுகிறது. (எசே 8:14).

☞ தம்மூஸ்(2) பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 4-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 10-ஆம் மாதம். இது ஜூன் பாதியில் ஆரம்பித்து ஜூலை பாதியில் முடிவடைந்தது.

☞ தர்ஷீஸ் கப்பல்கள்:
பண்டைய தர்ஷீசுக்கு (தற்போதைய ஸ்பெயின்) போய் வந்த கப்பல்களுக்குக் கொடுக்கப்பட்ட பெயர். காலப்போக்கில், நீண்ட தூரம் பயணம் செய்த பெரிய கப்பல்கள் இந்தப் பெயரில் அழைக்கப்பட்டன. வியாபாரத்துக்காக சாலொமோனும் யோசபாத்தும் இந்தக் கப்பல்களைப் பயன்படுத்தினார்கள். (1 இரா 9:26; 10:22; 22:48).

☞ தலைப்பாகை:
தலையைச் சுற்றிக் கட்டப்பட்டிருக்கும் துணி. உயர்தர நாரிழையால் செய்யப்பட்ட தலைப்பாகையை தலைமைக் குரு கட்டியிருந்தார். நீல நிற நாடாவால் ஒரு தங்கத்தகடு அதன் முன்பக்கத்தில் கட்டப்பட்டிருந்தது. ராஜாக்கள் தங்களுடைய கிரீடத்துக்குக் கீழே தலைப்பாகையைக் கட்டியிருந்தார்கள். நியாயம் தனக்குத் தலைப்பாகை போல இருப்பதாக யோபு சொன்னார். (யாத் 28:36, 37; யோபு 29:14; எசே 21:26).

☞ தலைமைக் குரு:
திருச்சட்டத்தின்படி, கடவுளுக்குமுன் மக்களுடைய பிரதிநிதியாகச் சேவை செய்த முக்கிய குரு. மற்ற குருமார்களை இவர் மேற்பார்வை செய்தார். “முதன்மை குரு” என்றும் அழைக்கப்பட்டார். (2நா 26:20; எஸ்றா 7:5) வழிபாட்டுக் கூடாரத்திலும் பிற்பாடு ஆலயத்திலும் இருந்த மகா பரிசுத்த அறைக்குள் நுழைவதற்கு இவர் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டார். பாவப் பரிகார நாளில் மட்டும்தான் அந்த அறைக்குள் இவர் போனார். “தலைமைக் குரு” என்ற நாமம் இயேசு கிறிஸ்துவுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. (லேவி 16:2, 17; 21:10; மத் 26:3; எபி 4:14).

☞ தலைமைத் தூதர்:
இந்த வார்த்தைகளுக்கு “தேவதூதர்களின் தலைவர்” என்று அர்த்தம். “தலைமை” என்ற வார்த்தைக்கு “தலைவர்,” “முக்கியமானவர்” என்று அர்த்தம். வேதாகமத்தில் இந்த வார்த்தை ஒருமையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது ஒரேவொரு தலைமைத் தூதர்தான் இருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. இந்தத் தலைமைத் தூதரின் பெயர் “மிகாவேல்” என்று வேதாகமம் சொல்கிறது. (தானி 12:1; யூதா 9; வெளி 12:7).

வெள்ளி, 5 ஜனவரி, 2018

பரிசுத்த வேதாகமத்தில் அர்த்தம் தரும் சொற்கள் ~ சு, சே




☞ சுருள்:
தோல் அல்லது பாப்பிரஸ் புல்லால் செய்யப்பட்ட நீளமான தாள். இதன் ஒரு பக்கத்தில் மட்டும்தான் எழுத்துக்கள் எழுதப்பட்டன. பொதுவாக, ஒரு குச்சியில் இது சுற்றப்பட்டிருந்தது. வேதவசனங்கள் இதில் எழுதப்பட்டு, பின்பு நகலெடுக்கப்பட்டன. இன்று புத்தகங்கள் பயன்படுத்தப்படுவது போல், வேதாகம காலங்களில் சுருள்கள் பயன்படுத்தப்பட்டன. (எரே 36:4, 18, 23; லூக் 4:17-20; 2 தீமொ 4:13).

☞ செங்கோல்:
ராஜா வைத்திருக்கிற கோல். இது ராஜ அதிகாரத்தைக் குறிக்கிறது. (ஆதி 49:10; எபி 1:8).

☞ செமினீத்:
“எட்டாவது” என்ற அர்த்தத்தைத் தரும் இசை சம்பந்தப்பட்ட வார்த்தை; குறைந்த சுருதியை இது அர்த்தப்படுத்தலாம். இசைக் கருவியோடு சம்பந்தப்படுத்திப் பேசும்போது, குறைந்த தொனியில் வாசிப்பதைக் குறிக்கலாம். பாடல்களோடு சம்பந்தப்படுத்திப் பேசும்போது, குறைந்த சுருதியில் இசை இசைப்பதையும் அதற்கு ஏற்ப பாடுவதையும் அர்த்தப்படுத்தலாம். (1 நாளா 15:21; சங் 6,12).

☞ சேக்கல்:
எபிரெயர்கள் பயன்படுத்திய சிறிய எடை. இது பணமாகவும் பயன்படுத்தப்பட்டது. இது 11.4 கிராமுக்குச் சமம். எடை துல்லியமாக இருக்க வேண்டும் அல்லது வழிபாட்டுக் கூடாரத்தில் வைக்கப்பட்டிருந்த நிர்ணயிக்கப்பட்ட எடைக்கல்லுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக ‘பரிசுத்த சேக்கல்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். சாதாரண சேக்கலிலிருந்து வித்தியாசப்பட்ட ராஜ சேக்கல் என்ற ஒன்று இருந்திருக்கலாம் அல்லது நிர்ணயிக்கப்பட்ட ஓர் எடைக்கல் அரண்மனையில் இருந்திருக்கலாம். (யாத் 30:13).

☞ சேபாத்:
பாபிலோன் சிறையிருப்புக்குப் பின்பு, யூதர்களின் பரிசுத்த காலண்டரின்படி 11-ஆம் மாதம்; அவர்களுடைய மதசார்பற்ற காலண்டரின்படி 5-ஆம் மாதம். இது ஜனவரி பாதியில் ஆரம்பித்து பிப்ரவரி பாதியில் முடிவடைந்தது. (சக 1:7).

☞ சேராபீன்கள்:
பரலோகத்தில், கர்த்தரின் சிம்மாசனத்தைச் சுற்றியிருக்கிற தேவதூதர்கள். “எரிகிறவர்கள்” என்பது செராஃபிம் என்ற எபிரெய வார்த்தையின் நேரடி அர்த்தம். (ஏசா 6:2, 6).

☞ சேலா:
சங்கீதம், ஆபகூக் புத்தகங்களில் உள்ள இசை சம்பந்தப்பட்ட வார்த்தை. இது ஒப்பிப்பதையும் குறிக்கலாம். பாடும்போதோ இசை இசைக்கப்படும்போதோ அல்லது இந்த இரண்டு சமயங்களின்போதோ இடையில் சற்று நிறுத்த வேண்டும் என்பதை இது குறிக்கலாம். அமைதியாய் தியானிப்பதற்காக அல்லது உணர்ச்சிப்பூர்வமான பாடல் வரிகளை வலியுறுத்திக் காட்டுவதற்காக இந்த நிறுத்தம் கொடுக்கப்பட்டிருக்கலாம். கிரேக்க செப்டுவஜன்ட் இதை டையாசால்மா என்று மொழிபெயர்த்திருக்கிறது; இதற்கு “இசை இடைவேளை” என்று அர்த்தம். (சங் 3:4; ஆப 3:3).